Saturday, April 19, 2014

சிறப்புச் செய்தி

பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடியை பேட்டி காண வாய்ப்பு கிடைத்த செய்தி 'தினமலர்' அலுவலகத்தில் பரவியதுமே, 'நாங்களும் மோடியை பார்க்க வருகிறோம்' என, ஐந்து பேர் அடங்கிய குழு திடுமென உருவாகியது. பெரும் எதிர்பார்ப்போடு, கோவை சென்றடைந்த குழுவினர், மோடி குறித்து பெரும் எதிர்பார்ப்போடு இருந்தனர். அதே நேரத்தில், அவரின் அணுகுமுறை எப்படி இருக்குமோ என்ற, சிறு ஐயமும் அவர்களிடையே இருந்தது.

எண்ண ஓட்டம்:
கடும் பாதுகாப்பு சோதனைகளுக்கு பிறகு, மோடியை சந்தித்த போது, அவர் படு இயல்பாக, 'வாங்க பக்கத்துல உட்காருங்க' என, தன் அருகிலேயே 'சோபா' இருக்கையை கைகாட்ட, 'தினமலர்' குழுவினருக்கு செம குஷி. 'ஆஹா, அண்டமுடியாத ஆட்சியாளர்களைவிட இவர் எவ்வளவோ மேல்' என்ற, எண்ண ஓட்டம் தான் அதற்கு காரணம். தமிழகத்தில் உள்ள தேர்தல் கள நிலவரம் பற்றி விசாரித்துவிட்டு, 'தினமலர்' நாளிதழில் தன்னைப்பற்றி வந்த முதல் பக்க செய்திக்கான மொழிபெயர்ப்பு பற்றி கேட்டுவிட்டு, மோடி, 'தினமலர்' நாளிதழுக்கான சிறப்பு பேட்டியை துவங்கச் சொன்னார். வழக்கமான 'தினமலர்' பாணியில், அவருக்கு கடினமான வினாத்தாள் தயாராக இருந்தது. முன்கூட்டியே கேள்விகளை பார்க்க விரும்பாமல், கேட்கக் கேட்க பதிலளித்தார். அவர் இந்தியில் அளித்த பேட்டியை தமிழில் மொழிபெயர்த்து உள்ளோம்:


* தமிழகத்திற்கும், பா.ஜ.,விற்கும் என்ன தொடர்பு? தமிழகத்திற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?

நீர்! குடிநீர், பாசனத்திற்கான நீர் ஆகியவை தான் தமிழகத்தின் பிரச்னை. இதை முதலில் தீர்ப்பேன். தேசிய மின்தொகுப்பை போல், நதிகளுக்கான ஒரு தொகுப்பை அமைப்பேன். அதாவது, ஆறுகளை இணைப்பேன். மழைநீரை செம்மையாக சேகரிக்கப்பதற்கும், சொட்டுநீர் பாசனம், குறுந்தெளிப்பான் பாசனம் போன்ற நுண்ணீர் பாசன முறைகளுக்கும், நகர்புற கழிவுநீர் சுத்திகரிப்பிற்கும் நான் முக்கியத்துவம் அளிப்பேன். இதன் மூலம், நீர் பிரச்னை தீர்க்கப்படும். இன்று, தொழிற்சாலைகளுக்கு நிறைய நீர் தேவைப்படுகிறது. நகர்ப்புற கழிவுநீரை சுத்திகரித்து, தொழிற்சாலைகளுக்கும், பாசனத்திற்கும் வழங்க ஏற்பாடு செய்வேன். நீர் பிரச்னை தீர்க்கப்பட்டால், தமிழகம் பெருமளவில் பயன்பெறும்.

பொருளாதார முன்னேற்றம்:
இது, உலகமயமான வர்த்தகத்தின் காலம். அதனால், துறைமுகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழகத்தில் உள்ள துறைமுகங்களை விரிவாக்கி, நவீனப்படுத்தி, துறைமுகங்கள் சார்ந்த பொருளாதார முன்னேற்றத்துக்கு குறிவைப்பேன். துறைமுகங்களின் முன்னேற்றம் மூலம், பொருளாதாரமும் முன்னேற வேண்டும். இப்படி செய்தால், இந்தியாவின் வளமைக்கு வாயிலாக தமிழகம் திகழும். அதேபோல், தமிழகத்தில், மிக நீளமான கடற்கரை உள்ளது. ஆனால், அறிவியல் ரீதியில் மீன்வளங்கள் பயன்படுத்தப்படவில்லை. மீன்வளத்தை தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம், அறிவியல் ரீதியில் பயன்படுத்தினால், மொத்த ஆசிய கண்டத்திற்கும், தமிழகம் மீன் உற்பத்தி செய்யும் அளவிற்கு முன்னேற்றலாம். இதுவே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். இதோடு, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வேன். இத்தகைய மீன்வள முன்னேற்றங்கள் மூலம், ஏழையினும் ஏழையாக உள்ள மீனவர்களும் பயன் பெறுமாறு திட்டங்களை வகுப்பேன். ஒரு ஆய்வு அறிக்கையில், 'இந்தியாவில் இன்னும் 10 ஆண்டுகளில், எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியைவிட, மின்னணு பொருட்கள் மற்றும் பாகங்களின் இறக்குமதி அதிகமாக இருக்கும்' என, குறிப்படப்பட்டு இருந்தது. இதனால், ஏற்கனவே, நமது அன்னிய செலாவணி நடப்பு கணக்கில் கடும் பற்றாகுதறை ஏற்படுகிறது. ஒரு சாதாரண அலைபேசியை நம்மால் தயாரிக்க முடியாதா? இந்த திறன் கூட நம்மிடம் இல்லையா?

தமிழகத்தில், ஏகப்பட்ட படித்த இளைஞர்களும், தொழில்நுட்ப அறிஞர்களும் உள்ளனர். அதனால், இந்த மாநிலத்தை ஒரு மின்னணு பாகங்கள் மற்றும் பொருட்கள் உற்பத்தி மையமாக மாற்றினால் சிறப்பாக இருக்கும் என்பது, என் எண்ணம். இதை

செய்வதன் மூலம், தமிழக தொழில் துறையில் உள்ள மந்த நிலையும் மாறும். மேலும், ஏராளமான இளைஞர்களுக்கு, இது, வேலைவாய்ப்பை அளிக்கும் என்பதால், இதை நிச்சயம் செய்வேன். கடந்த 1850களின் புள்ளிவிவரங்களின் படி, வேளாண் துறையில், தமிழகம் தான் முன்னிலையில் இருந்து உள்ளது. ஒரு ஏக்கரில் எவ்வளவு நெல் உற்பத்தி செய்யமுடியும் என்பதற்கு, தமிழகமே உச்சவரம்பு அளவுகோலாக இருந்து உள்ளது. அத்தகைய மண் வளமும், விவசாய தொழில்நுட்ப திறனும் இருந்த இந்த தமிழகத்தில், நிலை ஏன் மாறி உள்ளது? உண்மையில் நான் அறிய விரும்புகிறேன். நிச்சயம் கண்டறிவேன். வேளாண்மையில், தமிழகத்தை, பழைய உன்னதமான நிலைக்கு கொண்டு வர நம்மால் முடியும்!

* ராணுவ தளவாட உற்பத்தி முதல் அனைத்து துறைகளிலும் தனியார்மயத்தை பற்றி நீங்கள் பேசி வருகிறீர்கள். அந்த வகையில், உங்கள் ஆட்சியில், ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுமா?
நான் ஒரு போதும், ரயல்வே துறை தனியார்மயமாக்கப்பட வேண்டும் என, கூறியதே இல்லை. இல்லவே இல்லை! இந்த நாட்டில், பொது துறை நிறுவனங்கள் குறித்து இரண்டு விதமான சிந்தனைகள் உள்ளன. ஒன்று, பொது துறை நிறுவனங்கள் அழிவதற்கென்றே, மூடப்படுவதற்கென்றே பிறக்கின்றன என்ற, சிந்தனை.
இரண்டாவது, பொது துறை நிறுவனங்கள் விற்கப்படுவதற்கு என்றே உள்ளன என்ற, சிந்தனை. இது குறித்த எனது சிந்தனை சற்று மாறுபட்டது. இதை மூன்றாம் வகையான சிந்தனையாக கருதலாம். பொது துறை நிறுவனங்கள் குறித்த என்னுடைய சிந்தனைக்கு உதாரணம், குஜராத் மாநில உர நிறுவனம். நான் முதன்முதலாக முதலவர் பொறுப்புக்கு வந்த போது, அந்த நிறுவனம் படு மோசமான நிலையில் இருந்தது. அந்த நிறுவனம் மூடப்படுமோ என்ற பயத்தில், அதன் ஊழியர்கள், கிட்டத்தட்ட அழுதுகொண்டு இருந்தனர். ஆனால், அந்த நிறுவனத்தை மிக லாபகரமான நிறுவனமாக மாற்றினேன். எப்படி? அதை தொழில்நெறி மிகுந்த நிறுவனமாக மாற்றியதன் மூலமாகத்தான். அதாவது, தொழில்நெறி சார்ந்த கட்டமைப்பை பொது துறை நிறுவனங்களில் உருவாக்கினால், அவை லாபகரமானவையாக மாறும் என்பது எனது சிந்தனை.

அப்போது, வாஜ்பாய் ஆட்சியில் இருந்தது போல், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதற்கென்றே தனி அமைச்சகம் உங்கள் ஆட்சியில் இருக்காதா?
நீங்கள் இவை இரண்டையும் முடிச்சுப்போடுகிறீர்கள்! நான் ரயில்வே துறையை பற்றி இன்னும் என் பதிலை முடித்துக்கொள்ளவில்லை. ரயில்வே துறைக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளன. அதனால், அதை லாபகரமான பொது துறை நிறுவனமாக மாற்றுவதில் எந்த சிரமமும் இருக்காது. அதை எப்படி செய்யப்போகிறேன்? முதன்மையாகவும், முக்கியமாகவும், ரயில்வே துறையை நவீனமயம் ஆக்குவேன், தொழில்நெறி கட்டமைப்பை உருவாக்குவேன். துறைமுகங்களுக்கு ரயில் இணைப்புகள் செம்மையாக உள்ளனவா என்றால், இல்லை. அனைத்து துறைமுகங்களுக்கும் போதுமான ரயில் இணைப்புகளை உருவாக்குவேன். இதன் மூலம் சரக்கு போக்குவரத்து மேம்படும்.

ரயில்வே என்றால், பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்து என்பது மட்டும் அல்ல, இதில் சுற்றுலாவும் லாபம் ஈட்டக்ககூடியது. குறிப்பாக, ரயில்கள் மூலம் ஆன்மிக சுற்றுலாக்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. உதாரணத்திற்கு, பாட்னா சாகிப், அமிர்தசரஸ் சாகிப் ஆகிய இரண்டு சீக்கியருக்கான புனித தலங்களுக்கு இடையே தொடர்ச்சியாக ஒரு ஆன்மிக சுற்றுலா ரயில் ஓடிக்கொண்டு இருக்கும். அந்த ரயிலில், சீக்கியருக்கு புனிதமான வழிபாடுகள் நடத்த வசதி செய்து கொடுக்கப்பட்டு இருக்கும், ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கும், 'லங்கர்' (சீக்கியரின் புனித சமூக உணவு முறை) நடக்கும். அதாவது, அடிப்படை வசதிகளோடு, ஆன்மிக அனுபவத்திற்கு தேவையான அனைத்தும் அந்த ரயிலில் கிடைக்கும். சீக்கியருக்கான இந்த ரயில் போல, இந்துக்களுக்காக, ஜோதிர்லிங்கங்களுக்கு இடையே சுற்றும் ரயிலை அறிமுகம் செய்யலாம். இவ்வாறு, ஒவ்வவொறு மதத்திற்கும் செய்வதன் மூலம், பல கோடி பக்தர்கள் பயன் பெறுவதுடன், ரயல்வே துறைக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். இதற்கான வழித்தடங்கள் ஏற்கனவே உள்ளன.

ரயில்களை விடவேண்டும் அவ்வளவு தான். அதே போல், உப்பு போக்குவரத்து, நம் நாட்டில் மிகப்பெரிய சவாலாக உள்ளது. சமீபத்தில், உப்பு விலை கிலோ 150 ரூபாயை தொட்டது. உப்புக்கு எதற்கு அவ்வளவு விலை? இதற்கு காரணம், சீரான போக்குவரத்து இல்லாதது தான். தற்போது, 18 டன் திறன் கொண்ட ரயில் பெட்டிகள் உப்பு போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன, இவை இரும்பாலானவை, உப்பால் துருப்பிடிக்கும். அது தவிர, உப்பின் இயல்பால், இவற்றில், 2 டன் உப்பு தான் ஏற்ற முடியும். திறன் எவ்வளவு வீணாகிறது பாருங்கள். இதற்கு பதில், உப்பு போக்குவரத்திற்கு என, 'பைபர்'ஆல் ஆன, 6- 7 டன் சுமை திறன் கொண்ட சிறப்பு பெட்டிகளை தயாரிக்க வேண்டும். இதன் மூலம் கூடுதலான பெட்டிகளை இணைத்து, கூடுதலான அளவில் உப்பை எற்றிச்செல்ல முடியும். இப்படி செய்தால், உப்பு விலையும் தேவையில்லாமல் ஏறாது, இந்த தொழிலும் மேம்படும், ரயில்வே துறைக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். மொத்தத்தில், தொழில்நெறி அணுகுமுறை, நவீனமயம், வருவாய்க்கான நூதன திட்டங்கள் ஆகியவற்றின் மூலம், ரயில்வே துறை லாபகரமானதாக மாறும். இந்த பிரச்னை தொடர்வதற்கு காரணமே ஒரு சில அடிப்படை விஷயங்கள் செய்யப்படாதது தான்.

கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி இருந்தபோது தான் காவிரி பிரச்னை தீவிரமடைந்தது. மத்தியில் நீங்கள் ஆட்சியமைத்தால் காவிரி பிரச்னையை தீர்ப்பீர்கள் என எப்படி நம்புவது?
சர்காரியா கமிஷனின் (மத்திய - மாநில உறவுகளை சீராய்வு செய்ய உருவாக்கப்பட்ட ஆணையம்) பரிந்துரைப்படி, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ள பிரச்னைகளை தீர்க்க ஒரு கட்டமைப்பும், மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்னைகளை தீர்க்க ஒரு கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், இது எதுவும் செய்யப்படவில்லை. முக்கியமான வேலையாக இந்த பணியை மேற்கொண்டு, இத்தகய கட்டமைப்புகளை உருவாக்குவேன் (இதன் மூலம் கோர்ட்டுக்கு போய் நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாது). அதோடு, நதிகளை இணைப்போம் (நதிகள் இணைப்பை பா.ஜ., மிக முக்கியமான காரியமாக கருதுகிறது). இந்த இரண்டையும் செய்தாலே போதும், காவிரி பிரச்னை கண்டிப்பாக தீர்ந்துவிடும்! தீர்ப்போம்!
* உங்கள் பெயரை பயன்படுத்தி, நீங்கள் பிரதமராவதற்கு, ஆளும் கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டும் என, கிராம பகுதிகளிலும் பிரசாரம் நடக்கிறதே, இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?ஹாஹாஹா....இது, ஒரு தனித்தன்மையுடைய தேர்தல். இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன் முறையாக, மக்கள் ஓட்டளிக்கும் விதத்தில் ஒரு மாற்றம் நடந்துள்ளது. இதை தேர்தல் முடிவுகள் வெளியான பின் நீங்கள் உணர்வீர்கள். இது பற்றி விரிவாக ஆய்வு செய்யப்படும். பேசப்படும். இந்த மாற்றம் என்னவென்றால், மக்கள், சட்டசபை தேர்தலையும், லோக்சபா தேர்தலையும் பிரித்துப் பார்க்க தொடங்கிவிட்டனர். அந்த இரண்டு தேர்தல்களிலும் வெவ்வேறு கட்சிகளுக்கு ஓட்டு போடுகின்றனர். இந்த லோக்சபா தேர்தலின் போது, அருணாசல் பிரதேஷ், ஒடிஷா போன்ற மாநிலங்களில், சட்டசபை தேர்தலும் சேர்ந்தே நடக்கிறது. இருப்பினும், இந்த மாநிலங்களில், சட்டசபைக்கும், லோக்சபாவிற்கும் வெவ்வேறு கட்சிகளுக்கு ஓட்டு விழ வாய்ப்பு உள்ளது. அதாவது, வாக்காளர்கள், தங்கள் தேர்வுகளில் முதிர்ந்துவிட்டனர். என் பெயரை பயன்படுத்தும் படலம், வேறு சில மாநிலங்களிலும் நடக்கத்தான் செய்கிறது. அதற்கு என்ன செய்வது? வாக்காளர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டியது தான்! இவ்வாறு, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேட்டி அளித்தார்.

எம்.ஜி.ஆர்., போல...:பேட்டி முடிந்தவுடன், அவரின் ஆற்றல் தாக்கத்தோடு வெளியேவந்த ஒரு செய்தியாளர், 'நான் 6ம் வகுப்பு படிக்கும் போது, எம்.ஜி.ஆர்., என்னை ஒரு முறை தூக்கி, அணைத்துக் கொண்டார், அப்போது, அந்த பெருந்தலைவரின் அணைப்பால் ஒரு விதமான சிலிர்ப்பு ஏற்பட்டது. அந்த விதமான உணர்வு, இன்று தான், மோடி சந்திப்பின் மூலம் ஏற்பட்டு உள்ளது. அவர் எப்படி, எம்.ஜி.ஆர்., போல ரோஜா பூ கலர்ல இருக்காரு இல்லியா...' என்ற, அவரின் புளகாங்கிதத்தில் ஏற்பட்ட அதீத உற்சாகத்தை சமாதானப்படுத்தி, அழைத்துவருவதற்குள், மற்றவர்களுக்கு போதும் போதும் என, ஆகிவிட்டது.


- நமது சிறப்பு நிருபர் -


No comments: