Thursday, September 25, 2014

தமிழ்-தமிழர் பற்றி 25/9/14.

தமிழர்கள் தமிழை கற்காமல் இருப்பதே மிகப் பெரிய துரோகம்: கனடா பேராசிரியர் வேதனை!
தமிழர்கள் தமிழை கற்காமல் இருப்பதே மிகப் பெரிய துரோகம்: கனடா பேராசிரியர் வேதனை!
Posted Date : 12:32 (24/09/2014)Last updated : 16:48 (24/09/2014)
புதுச்சேரி: தமிழர்கள் தமிழை கற்காமல் இருப்பதே மிகப் பெரிய துரோகம் என்று கனடா பேராசிரியர் வேதனை தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் 13வது உலக தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தமிழ் பேராசிரியர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இணையத்தில் தமிழ் மொழி சந்திக்கும் பிரச்னைகள், தமிழ் மொழியை கையடக்க கருவிகளில் எவ்வாறு கொண்டு செல்வது, தமிழ் மொழித் தொடர்பான புதிய மென்பொருள் கண்டுப்பிடிப்புகள் என மொழி சார்ந்த பல விவதாங்கள் இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது. பொது அமர்வு, சிறப்பு அமர்வு என மூன்று நாட்களும் மூன்று அமர்வுகளாக பிரிக்கப்பட்டு 100க்கும் அதிகாமான பேராசிரியர்களின் தமிழ் மொழி சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. 

இந்திய அறிவியல் பயிலகத்தை சேர்ந்த பேராசிரியர் ஏ.ஜி.ராமகிருஷ்ணன் நம்மிடம் பேசும்போது, ''15 வருட முயற்சியின் பயனாக பல புதிய தமிழ் மென் பொருட்களை கண்டுபிடித்து வருகிறோம். ஓ.சி.ஆர். எனப்படும் 'அச்சு உணறி' என்ற மென் பொருள் மூலம் ஒரு புத்தகத்தை பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் ப்ரெய்லி புத்தகமாக எளிதாக மாற்ற முடியும். இதுவரை நாங்கள் 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவ்வாறு மாற்றியுள்ளோம். அதேபோல், கையெழுத்து உணறி மென்பொருளையும் கண்டுப்பிடித்துள்ளோம். அதனை அடுத்த கட்டம் எடுத்து செல்வதற்கான முயற்சிகளில் தான் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.

''டெக்ஸ்ட் டூ ஸ்பீச்'' எனப்படும் எழுத்தை ஒலியாக மாற்றும் மென்பொருளும் எங்களுடைய கண்டுப்பிடிப்புகளில் ஒன்று. இந்த முறையை இன்னும் மேம்படுத்த உள்ளோம். இதனை 'டெய்சி' என்பார்கள். புத்தகத்தை போன்றே ஒலி மூலம் பக்கம் பக்கமாக பிரித்து கேட்க முடியும். அதேபோல், ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் தமிழ் தட்டச்சிற்கான மென் பொருளையும் உருவாக்கியுள்ளோம். இது, 'இன்டிக் கீ போர்ட்' என்ற பெயரில் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கின்றது. அதன் மூலம் திராவிட மொழிகள் அனைத்தையும் கையடக்க கருவிகளில் பயன்படுத்த முடியும். எங்களுடைய எதிர்கால லட்சியமாக ஒரு புகைப்படத்திலிருக்கும் ஆங்கில எழுத்துக்களை தனியாக பிரித்தெடுத்து தமிழ் மொழிக்கு மாற்றம் செய்வதில் தீவிரமாக முயற்சித்து வருகிறோம். ஆங்கிலத்தில் எப்படி 'யூனிக்கோட்' பொதுவாக உள்ளதோ அதுப்போன்று தமிழிலும் பொதுவான எழுத்துரு அமைந்தால் எங்களுடைய முயற்சி வெற்றி பெறும். இணையத்தின் எட்டுத் திக்கிலும் தமிழ் மொழி சென்று சேர வேண்டும் என்பதே என்னுடைய கனவு" என்றார்.

கனடா பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சி.ஆர்.செல்வகுமார் கூறும்போது, ''தமிழ் நாட்டில் தான் தமிழுக்கு பெரும் தட்டுப்பாடு. கனடாவில் அப்படியல்ல. தமிழ் நாட்டில் எல்லாமே ஆங்கிலத்தில்தான் உள்ளது. சூழல் இப்படி இருந்தால் தமிழை யார் கற்பார்கள்? ஆங்கில மொழி மோகம் என்பது தமிழர்களே உருவாக்கி கொண்ட ஒன்று. அதில் ஆட்சியாளர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. தமிழர்கள் தமிழை கற்காமல் இருப்பதே தமிழினத்திற்கு செய்யும் மிகப் பெரிய துரோகம். ஓன்டோரியோ நகரில் 55 பள்ளிக் கூடங்களில் தமிழ் சொல்லித்தருகிறார்கள்" என்றார்.

சுவிஸ் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் கல்யாணி கூறும்போது, ''தமிழ் மொழியை இணையம் மூலம் மற்றவர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்னுடைய முக்கிய பணி. மால்கம் கூப்பர் என்பவர் முதன் முதலில் தமிழ் மொழிக்கான எழுதுருவை தயாரித்தார். அது தமிழ் இணைய வரலாற்றிலே மிகப் பெரிய மைல் கல். 85களில் கணிணிகளில் தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. அதன்பின் வந்த மின்னஞ்சல், வலைப்பூ போன்றன இணையத்தில் தமிழ் ஆர்வலர்களை ஒன்றிணைத்தன. 94களில் 'மயிலே' என்ற எழுத்துருவை சொந்தமாக உருவாக்கி சோதனை ஓட்டமாக திருக்குறள்களை தட்டச்சு செய்து வெற்றிகரமாக அனுப்பினேன். சமூக வளைத்தளங்கள் தான் இன்று மனிதனுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள். நம் தாய் மொழித் தமிழில் கருத்துக்களை பதிவிடுவதை பெருமையாக கருத வேண்டும்" என்றார்.

மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் மு.இளங்கோவன், ''தமிழ் மொழி இணையத்தில் கடந்து வந்த பாதை, இன்னும் செல்ல வேண்டிய தூரத்தை இந்த மாநாட்டின் மூலம் அடையாளப்படுத்தி உள்ளோம். வெளிநாடுகளிலிருந்து முக்கியமாக மலேசியாவிலிருந்து மட்டும் 60 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். அடுத்த கட்டமாக தமிழை கையடக்க கருவிகளில் கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்களை இம்மாநாட்டின் மூலம் தீர்வு கண்டிருக்கிறோம். தமிழ் மொழி தொடர்பான புதிய மென் பொருள் தயாரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ் இணைய ஆர்வலர்களுக்கு புதிய உத்வேகத்தை இந்த மாநாடு வழங்கி இருக்கிறது" என்றார்.

நா.இள.அறவாழி

படங்கள்:
ஜெ.முருகன்

No comments:

Post a Comment