Monday, November 18, 2013

கவிதை பற்றி,

கவிதை மதிப்பீடு
=================
1. வடிவம் [ Form ] 2. தரிசனம் [Vision]  3.புதுமை. [Novelty]

ஒரு கவிதையை நாம் ரசிக்கும்போது பெரும்பாலும் அதன் வடிவத்தையே ரசிக்கிறோம். ‘எப்டிச் சொல்றான் பாரு கவிஞன்’ என வியக்கும்போது கவிதை சொல்லப்பட்டிருக்கும் முறையே நம்மைக் கவர்ந்திருப்பது தெரிகிறது.

அதேவரிகளை வேறுவகையில் சொல்லியிருந்தால் அதை கவிதை என்றே சொல்லியிருக்க மாட்டோம். அந்த அமைப்பு அல்லது வெளிப்பாட்டையே வடிவம் என்கிறோம்.

வடிவம் என்பது மொழிவெளிப்பாட்டின் ஒரு முறை. மொழியில் உருவாக்கப்படும் ஒரு கட்டமைப்பு. அந்த வடிவத்தில் உள்ள துல்லியமே நம் கவிதையனுபவத்தை தீர்மானிக்கிறது.

பலவரிகளில் சொல்லவேண்டியதை சுருக்கமாகச் சொல்லி, அல்லது வேறொன்றைச் சொல்லி குறிப்புணர்த்தி, அல்லது சொல்லவேண்டியதை மௌனமாக்கி நம் கற்பனைமூலம் அங்கே செல்லவைத்து கவிதை தன் கவிதை அனுபவத்தை நிகழ்த்துகிறது.

எது நல்ல வடிவம் என்றால் எது சிறப்பாக அதன் விளைவை நிகழ்த்துகிறதோ அது தான்.

எது நல்ல சிறகு என்றால் எது நன்றாகப் பறக்கச்செய்கிறதோ அது.

அழகான கவிதை என்றால் என்ன, அழகாகச் சொல்லப்பட்ட கவிதை. அழகான வடிவம் கொண்ட கவிதை. கவிதையின் அழகியல் என்பது முழுக்க முழுக்க வடிவம் சார்ந்ததே.

ஆனால் ஒரு கவிதையை நாம் மகத்தானது என்று சொல்லவேண்டுமென்றால் அது  அழகானதாக இருந்தால் மட்டும் போதாது. ஆழமும் இருக்க வேண்டும் என்கிறோம். அது நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்படவேண்டும். நம் அனுபவங்களை விளக்க வேண்டும். நாம் அறிந்தவற்றை மேலும் விரிவாக்க வேண்டும். நமக்குத்தெரியாதவற்றைச் சொல்ல வேண்டும். நாம் உள்வாங்கிய அனைத்தையும் புத்தொளியில் தொகுத்துக்காட்டவேண்டும். இதையே கவிதையின் தரிசனம் என்கிறோம்.

கவிதையின் தரிசனம் ஓர் அறிவியல் சூத்திரம் போல நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அது விரிவான தர்க்கத்துடன் முன்வைக்கப்படவேண்டுமென்பதில்லை. 

அதை கவிஞன் சொல்லும்போதே நாம் அதனுடன் இணைந்துகொள்கிறோம். ஆம் ஆம் என்று அதை ஏற்று நம் அகம் முழங்குகிறது. கவித்துவ தரிசனம் என்பது ஒரு மின்னல் மட்டுமே. அந்த மின்னலில் அது உலகை முழுக்கக் காட்டித்தருகிறது.

சிறந்த கவிதையின் தரிசனம் அதன் வடிவத்தை தீர்மானிக்கிறது. அதன் வடிவம் அந்த தரிசனத்தை உருவாக்குவதற்காக மட்டுமே பிறந்தது போலிருக்கிறது. அவற்றைப் பிரிக்கவே முடியாமல் ஒன்றாகவே நாம் எந்நிலையிலும் உணர்கிறோம்.

மூன்றாவதாக அந்தக் கவிதை நாம் அதுவரை வாசித்த கவிதைகளில் இருந்து சற்றேனும் புதிய அனுபவமாக இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். கம்பன் தமிழின் மகத்தான கவிதைகளை எழுதிவிட்டான். அதன் பின்னரும் நாம் ஒரு கவிஞனிடம் என்ன எதிர்பார்க்கிறோம்? புதுமையை. நேற்று இல்லாதிருந்த ஒன்றை. அடுத்த கட்ட நகர்வை.

இன்றைய ஒரு நல்ல கவிதை இந்த அளவுகோல்களால்தான் இயக்பாகவே அளவிடப்படுகிறது.

No comments: