Showing posts with label கவிதை பற்றி. Show all posts
Showing posts with label கவிதை பற்றி. Show all posts

Tuesday, May 30, 2017

கவிதை பற்றி

வார்த்தை-கவிதை-கவிஞன்=வாழ்வில் பாதிக்கிறது
----------------------------------------------------------
எந்தக் கவிஞனும் வாழ்க்கையை நேரடியாகப் பாதிப்பதில்லை. அது சாத்தியமுமில்லை. அவன் கவிதைகள் மூலம் உடனடியாக எதுவும் நிகழ்வதுமில்லை.


கவிஞன் ஒரு பாதிப்பை நிகழ்த்த வேண்டும் என்றால் அது எங்கு நிகழ்கிறது? வானத்திலா? கடலிலா? மண்ணிலா? காற்றிலா? எங்கு நிகழ்கிறது அந்தப் பாதிப்பு?

தனி அறையில் ஒரு காகிதத்தில் சில எழுத்துகளை வரிசைப்படுத்துவதன் மூலம் ஒரு சமூகப் பாதிப்பை நிகழ்த்த முடியும் என்றால் எங்கு நிகழ்கிறது அந்தக் காரியம்.

கவிஞனுடைய செயல்முறை வித்தியாசமானது. பாதிப்பு நிகழும் முறை வித்தியாசமானது. அவன் காலத்தை முறித்து எதுவும் செய்வதில்லை. வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்து புதிய தளத்தில் அதைத் திருப்பிவிட அவனிடம் பேராற்றல் எதுவும் இல்லை.

மிகமிகச் சாவகாசமாக நம் புலன்களால் உணர முடியாதபடி கண்டறிவதுகூடச் சாத்தியமில்லாதபடி, அவன் காலத்துக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கிறான்.
காலத்துக்குள் ஊடுருவது எப்படிச் சாத்தியமாகிறது?

காலம் எங்கே இருக்கிறது? ஒரு கவிஞனாக வாழ்க்கையைப் பாதிக்க வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும். கவிஞனுக்கு ஒரு சாத்தியக்கூறுதான் இருக்கிறது.

அவன் மொழியுடன் விசேஷமான உறவு கொண்டிருக்கிறான். விசேஷம் என்று சொல்லலாம். வித்தியாசமான, ரகசியமான, நுட்பமான, மாந்த்ரீக அம்சம் கொண்ட உறவு கொண்டிருக்கிறான் என்றெல்லாம் சொல்லாம். ஒன்று தெளிவு. மொழியுடன் சகஜ மனிதன் கொண்டிருக்கும் உறவல்ல அது. சாதாரண மனிதன் கொண்டிருக்கும் உறவல்ல அது.
மொழியைப் பாதிப்பதன் மூலம்தான் கவிஞன் சமூகத்தைப் பாதிக்கிறான்.

நித்திய வாழ்வில் எண்ணற்ற மக்கள் எண்ணற்ற காரியங்களுக்காகச் சொற்களைச் சிதறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தச் சொற்சிதறலைச் சார்ந்து நிற்கிறது மனித வாழ்க்கை. இந்தச் சொற்சிதறலைச் சார்ந்து நிற்கிறது மனித உறவு. பயன்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்பட்டதன் மூலம் தெளிவு பெற்றுவிட்ட சொற்களின் ஆற்றலை நம்பி வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

சாத்தியமான காரியங்களுக்குள் மொழி சுற்றிச் சுழன்றுகொண்டு வரும்போது அதிகப் பலன்களை மொழி ஈட்டித் தரும் நேரத்திலேயே மொழியின் எல்லைகளும் இறுகுகின்றன. அர்த்தம் இறுகுகிறது. சொற்கள் கூழாங்கற்களாக மாறிவிடுகின்றன.

கூழாங்கற்களாக மாறிவிட்ட சொற்கள் மீது அரசியல்வாதிகளுக்கு இருக்கும் காதல், ஜனரஞ்சகக் கவிஞனுக்கு இருக்கக்கூடிய காதல் கொஞ்ச நஞ்சம் அல்ல. மேடையிலும், காகிதத்தின் மீதும் அந்தக் கூழாங்கற்களை வீசிவீசிப் பிடிப்பதில் படைப்புமனம் அற்ற பழக்கவாதிகளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. கூழாங்கற்கள் போல் இறுகும் சொற்களை மீண்டும் அர்த்தச் செறிவுக்குள் தள்ளி அதை விம்மும்படி செய்பவன் கவிஞன்.

வார்த்தைகள் ஒன்றுக்கொன்று கொள்ளும் விநோத உறவுகளில் இந்த விம்மல்கள் நிகழுகின்றன. இந்த விநோத உறவு நிகழ வேண்டுமென்றால் மிகுந்த படைப்பாற்றல் வேண்டும்.

படைப்பாற்றல் என்பது ஒரு சக்தியின் உருவம். அந்த ஆற்றலை நீங்கள் கீறிப்பார்த்தால் அதில் சிந்தனை சார்ந்த ஒரு நுட்பம் துடித்துக் கொண்டிருப்பதை உணரலாம். மாறுபட்ட கோலங்களுக்கு அடிப்படையாக நிற்கும் ஏதோ ஒன்றைக் கவிதை எப்போதும் தேடிச் செல்ல முனைகிறது.

நாம் விரும்பிப் படித்த பல கவிதைகளில் ஒரு சில கவிதைகள் நம்மை வெகுவாகக் கவர்கின்றன. மிக அதிகமாக நம்மைக் கவரும் கவிதைகளுக்குள் தென்படும் பொதுத்தன்மை என்ன என்று நாம் யோசிக்க முற்படுகிறோம். அந்தப் பொதுத்தன்மையை வரையறுப்பது மிகக் கடினமாக இருக்கிறது. சிறப்பான ஒவ்வொரு புதுக்கவிதையும் அந்தப் பொதுத்தன்மையை ஏதோ ஒருவிதத்தில் குலைத்து, பொதுத்தன்மை சார்ந்த நம் தீர்மானத்தையும் குலைத்துவிடுகிறது.

சிறந்த கவிதைகளுக்குப் பொதுவாக நிற்கும் நியதிகளை வரையறுக்க முயல்கிறோம்.

Friday, November 6, 2015

கவிதை பற்றி


முதல்பார்வையில் கவனம் பெறும் கவிதைகள் பலசமயம் எளிய உத்தி சோதனைகளாகவோ, நமது வேரூன்றிய ரசனைமுறைகளைத் திருப்தி செய்பவையாகவோ இருக்கக்கூடும்.

தொடர்ந்த வாசிப்பில் விரிவதே சிறந்த கவிதை.

தொடர்ந்து கவனம் இல்லாமல் நல்ல கவிதைகள் நம்மை எட்டாது போய் விடக்கூடும்.

கவிதை ரசனை என்பதன் முதல் பொருள் கவிதைமீதான சிரத்தை என்பதே.

Tuesday, October 27, 2015

கவிதை பற்றி(27/10/2015)




 
Tk Kalapria

சிங்கப்பூரில் நடைபெற்ற கவிதைப்பயிலரங்கிற்கான முன்னோட்ட உரையின் முதல் பகுதி

அன்புள்ள நண்பர்களே,
அனைவருக்கும் வணக்கம்,
"Military justice is to justice what military music is to music." -Groucho Marx

ராணுவ நீதியைப் போன்றதே ராணுவ இசையும் என்றொரு பிரபலமான மேற்கோள் ஒன்று உண்டு.ராணுவ இசையும் இசைதான் ஆனால் அதில் ஒரு ஒழுங்கு இருக்கும். சுதந்திரமாக ரசித்து அனுபவிக்க முடியுமா...அதனால் இது ஒரு பயிலரங்கம் என்ற ஏதும் இறுக்கத்துடன் இருக்க வேண்டாம். Just relax.

உங்களுக்குச் சில தயாரிப்புகள் பற்றி ஏற்கெனவே குறிப்புகளும் கேள்விகளும் தரப்பட்டிருக்கிறது. அவை உங்களுக்கு, வகுப்பறை - ஆசிரியர் போன்ற மனோபாவத்தை உண்டுபண்ணியிருந்தால் அதை மறந்து விடுங்கள் எனபதே என் இப்போதைய வேண்டுகோள்.கண்டிப்பாக அவற்றை வைத்து நாம் விவாதிக்க இருக்கிறோம். இப்போதைக்கு நாம் சுதந்திரமாக உரையாடலாம்.
 
கவிதை எழுதுவதும் கவிதை படிப்பதும் கடினமானதா. இதற்கு நேர்மறையான பதில், ’கடினம் இல்லை’ என்பதே .

சில கவிதைகள், கடினமான கவிதைகள் நமக்கு ஒரு தயக்கத்தைத் தருகிறதே என்று கேட்பீர்களேயானால் ’ஆமாம்’ என்ற எதிர்மறையான விடையை என்னிடமிருந்து பிடுங்குகிறீர்கள் என்றே சொல்லுவேன். கண்ணதாசன் பாணியில் சொன்னால் ‘உண்டென்றால் அது உண்டு இல்லையென்றால் அது இல்லை.’ அதனால் நாம் நேர்மறையாகவே யோசிப்போம்.

அவ்வை சொல்லியிருக்கிறாரில்லையா சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்று. தொடர்ந்த பயிற்சியின் மூலம் நல்ல கவிதைகள் எழுத முடியும். கவிதை எழுதக் கற்றுக் கொள்ளவும் முடியும்.

பிறவிக் கவிஞர் என்று ஒருவர் கிடையவே கிடையாது. அல்லது எல்லோரிடமும் கவிதை படைக்கும் ஆற்றல் ஒளிந்தே இருக்கிறது. சிறிய முனைப்புடன் செயல்படுகிற யாராலும் கவிதை எழுத முடியும்.

திட்டவட்டமான பாடத் திட்டங்கள் மூலம் அல்ல, எளிதான பகிர்ந்து கொள்ளல் மூலம்,நாம் கொஞ்சம் கற்றுக் கொள்ளலாம்

உண்மையில் சொன்னால் ஒவ்வொரு நொடியிலும் ஒரு படைப்பாளி கற்றுக் கொண்டேதான் இருக்கிறான். ஒரு வகையில் சொன்னால் நான் இப்பொழுது கூட இங்கே உங்களிடம் கற்றுக் கொள்ளவே வந்திருக்கிறேன்.

கற்றுத்தரவரவில்லை. தவிரவும் வாழ்க்கை நமக்கு தினம் தோறும் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. வாழ்க்கையிலிருந்துதான் எல்லாப் படைப்புகளும் தோன்றுகின்றன.

இன்றைய கவிதை என்பது அநுபவத்தின் சாரத்தை உணர்த்துவது, விவரிப்பது அல்ல. உணர்த்துவதற்கும் விவரிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

“கவிதை என்பது வாழ்க்கையின் தடயம். நம்முடைய வாழ்க்கை நன்றாக எரிந்திருந்தால் அதன் சாம்பலே கவிதை.”
என்று லியானார்ட் கோஹன் என்பவர் கூறுகிறார்.

இந்த மேற்கோள்கள் எல்லாமே ஒரு விஷயத்தை நன்கு உணர்ந்த பின் இறுக்கமான வார்த்தைகளில் சொல்லப்படுவதைக் கவனித்தீர்களா. இது எவ்வளவு விஷயங்களை யோசிக்க வைக்கிறது வாழ்க்கையை எரித்துப் பார்க்கச் சொல்கிறார்.

பாரதி சொன்ன தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்த லாலா எனக்கு நினைவுக்கு வருகிறது.
வாழ்க்கை /நமக்குப் பல சொற்களைத்/ தருகிறது. வாழ்க்கை/ பல சொற்களைப் பிடுங்கவும்/ செய்கிறது./ எஞ்சியவை எங்கே போகிறது./ அவை நல்ல கவிதையில் இருக்கிறது. என்று இந்த உரையைத் தயாரிக்கும் போது ஒரு சுமாரான கவிதை தோன்றியது.

ஆனால் வேறு நல்ல கவிதைகளை அறிமுகம் செய்து கொள்வதே நமது நோக்கம். என் வாசிப்பில் நான் படித்த சில நல்ல கவிதைகளைச் சொல்லுகிறேன். உங்கள் வாசிப்பில் இவற்றை விட நல்ல கவிதைகளை நீங்கள் எதிர் கொண்டிருக்கலாம். இரண்டு பேருக்கும் பொதுவானவையும் இருக்கலாம்.முதலில் நான் சிலவற்றை ஆரம்பிக்கிறேன்.

தமிழ்ப் புதுக் கவிதையின் மூலவர்களில் ஒருவர் இரா.மீனாட்சி. சி.சு செல்லப்பா 60 களில் நடத்திய ’எழுத்து’ காலத்திலிருந்தே எழுதி வருபவர், ஆனால் அதிகமும் பேசப்படாதவர். அவரது ஒரு கவிதை, எளிய கவிதை, அரை நூற்றாண்டைக் கடந்த நவீன கவிதை.
--------------------------------------------------------------------------------------

எதிர் நிற்கிறேன்
________________
வீரனே வாளெடுக்கிறாய்
நான் பகை
கவசமெடுக்கிறேன்
தோழனே! சிரிக்கிறாய்
நான் பகை
கூடச் சிரிக்கிறேன்
இறைவனே!அருளுகிறாய்
நான் பகை
குமுறி அழுகிறேன்

இதில் ஒரு அடுக்கு முறை இருக்கிறது. –விரிவாக- அது அளவாக இருக்கிறது. அதனாலேயே இது அழகாகவும் இருக்கிறது. இதையே இன்றைய வார்த்தைகளில் சுருக்கியும் வாசிக்கலாம். ஆனால் சிலவற்றைச் சுருக்க முடியாது.

சுருக்க முடியாத அளவுக்கு இறுக்கமாக இருப்பதே ஆகச்சிறந்த கவிதை.
-------------------------------------------------------------------------------------------
ஒரு கியூபா கவிதை

போர்
எல்லா விமானங்களும் இருப்பிடங்களுக்குத் திரும்பி விட்டன
எல்லா மனிதர்களும் வீடுகளுக்குத் திரும்பவில்லை
எல்லா வீடுகளும் திரும்பினவர்களின் வீடுகளாயில்லை
திரும்பினவர்களின் வீடுகளில் எல்லாமும் இருக்கவில்லை
-Manuel Diaz Martinez


இது மொழி பெயர்ப்பு என்றால்க் கூட இதில் ஒரு வரியை, ஏன் ஒரு வார்த்தையைக் கூட மாற்ற முடியாது.
------------------------------------------------------------------------------------------- 

இன்னொரு கவிதை,தமிழின் முக்கியமான கவிஞரான சுகுமாரன் எழுதியது.

கையில் அள்ளிய நீர்
================
அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலை புரளுமதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்.





 

Sunday, April 26, 2015

கவிதை பற்றி-26/04/2015.


‘எது கவிதை?’
என்னும் கட்டுரையில் கவிதையைக் குறித்ததான அவர் பார்வையை விளக்கமாக முன்வைத்துள்ளார். “பிரகிருதியின் தோற்றங்களோடு மனித உணர்ச்சிகளைச் சம்மேளனப்படுத்திக் கவிதை இயற்றுவதைச் சுவையுடன் செய்ய வேண்டும்.” உணர்ச்சிகளின் சமநிலை அவருக்கு முக்கியமானது. நல்ல கவிதையின் முதன்மையான பண்பு இது. “நல்ல கவிதையின் அடிநாதம் அறமாக இருத்தல் வேண்டும். ஆனால் இந்த அறமார்க்கத்தைச் சாதாரணமாக வெள்ளையாகச் சொல்லிவிட்டால் அது கவிதையாகாது. கேவலம் போதனை நூலாகத்தான் ஆகும்.” கவிதையின் குறிப்புணர்த்தும் போக்கு அவருக்கு முக்கியமானது. சமகால ஐரோப்பிய கவிதைகளிலிருந்து இம்மதிப்பீட்டை அவர் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் முன்வைத்தது கவிதையின் செவ்வியல் வடிவமே. “கவிதையானது தர்மத்தை அடிநாதமாகக் கொண்டு அறிவின் பகுதியாகிற கற்பனாசக்திக்கு நல்லுணர்வைத் தந்து, இயற்கையின் அழகுகளையும், மனித வாழ்க்கையின் சுகதுக்கங்களையும் உன்னதமான பாவங்களையும் சுவையோடு கோத்து, மனிதனுடைய இதயத்தில் பேருணர்ச்சிகளை எழுப்ப வேண்டும்.” வ.வே.சு. ஐயர் முன்வைத்துள்ள இப்பண்பு செவ்வியல் கவிதைக்கே உரியது. இதன் அடிப்படையில் தமிழ்க் கவிதை மரபின் மறுமலர்ச்சிக்கு முன்னதான நிலையை மதிப்பிட்டுள்ளார். “சென்ற முந்நூறு வருஷங்களில் நமதுநாட்டில் முதல்தரமானக் கவிதை என்று சொல்லத் தகுந்ததாக ஓர் அடிகூட எழுதப்படவில்லை.” முந்நூறு வருடங்களில் முதல்தரமானக் கவிதை ஓர் அடிகூட எழுதப்படவில்லை என்பது மிகையானத் தோற்றத்தைத் தரலாம். ஆனால் இதற்கிணையானக் கருத்தை, வ.வே.சு. ஐயரின் சமகாலத்தவரான மாதவைய்யரும் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வ.வே.சு. ஐயரின் கவிதை குறித்த நிலைபாடு இத்தகைய நிலைபாட்டிற்கே கொண்டு செல்லும். சமகாலத்து பண்டிதர்களைக் கவிஞனாக ஏற்க மறுக்கிறார். “கவிதை ஒன்றுதான் உலகத்தில் பண்டிதனால் எழுதத்தக்கது என்பது இல்லை. கடைத்தரமான கவியாக இருப்பதைவிட நல்ல உரையாசிரியனாக இருத்தல் எவ்வளவோ மேல்.” தமிழ்க் கவிதை மரபின் மீதான வ.வே.சு. ஐயர் அறிவும் குறிப்பிடத்தக்கது. ‘நம் பெண்கள்’ கட்டுரையில் சங்க இலக்கியம் மீதுள்ள தன் ஈடுபாட்டைப் பதிவு செய்துள்ளார். “கலித்தொகை குறுந்தொகை களையும் மற்றுமுள்ள அகப்பாட்டுக்களையும் படிக்கையில் பண்டைய நாள்களில் தமிழ்ப் பெண்கள் விவாக விஷயத்திலும் மற்ற விஷயங்களிலும் எத்தனை சுதந்திரம் அனுபவித்தார்கள் என்பது நன்கு புலனாகும். மற்றெந்தப் பாஷையிலும் எழுதியுள்ள பெண் கவிகளை விடத் தமிழ்ப் பாஷையில் பாடிய பெண் கவிகளின் தொகை மிகவும் அதிகம்.” சங்க இலக்கியத்தை அவர் அறிந்திருந்தார் என்பதல்ல, அவருடையதான புரிதலும் இருந்துள்ளது. தமிழ் இலக்கிய மரபுபினைக் குறித்ததான இப்புரிதல், ஐரோப்பிய இலக்கியச் சிந்தனைக் குறித்த அறிவு, இவை இரண்டும் வ.வே.சு. ஐயரிடம் இணைந்து செயல்பட்டுள்ளன.

Friday, November 14, 2014

கவிதை பற்றி 14/11/14.

பொன்னமராவதி,மேலைச் சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற கவிதைப் பயிலரங்கத்திற்கான முன்னோட்ட உரை


அன்பான நண்பர்களே,
வணக்கம்,
அவ்வையின் இரண்டு வாக்குகளுடன் இந்த உரையாடலை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது என்கிற பாடலில் வருகிற ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது என்கிற வரி ஒன்று. இன்னொன்று ‘ சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்‘ என்கிற வரி ஒன்று. நம்முடைய நல்லூழ் என்று சொல்லலாமா, நாம் அரிதான ஞானமும் கல்வியும் வாய்க்கப் பெற்று இங்கே கூடியுள்ளோம். இங்கே “கற்றது கைம்மண்ணளவு” என்கிற ஞானத்தையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் கவிதை பயில ஒன்று கூடியிருக்கிறோம். அப்படியானால் கவிதை என்பது அவ்வளவு பெரிய விஷயமா அதற்கு கடலளவு ஞானம் வேண்டுமா என்கிற கேள்விகள் எழ்லாம். அப்போதுதான் அவ்வையின் மற்றொரு வாக்கு ஆற்றுப்படுத்தும் விதமாக ஒலிக்கிறது. “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.”என்கிற வாக்கு. ஆம் நாம் கவிதையைப் பழகி விடலாம் என்பதே என் கருத்து.
கவிதை என்பது என்ன என்பதற்கு திட்டமான வரையறை கிடையாது. அவரவர் அனுபவித்த கவிதை உணர்வுகளின் விளக்குதலாக நிறையச் சொல்லியிருக்கிறார்கள்.அவையே அழகான கவிதை வரிகள் போல இருக்கும்.
புதுமைப்பித்தன் கவிதை என்பது ஒரு மோகனமான கனவு என்கிறார்.
Poetry is an echo, asking a shadow to dance. – Carl Sandburg
கவிதை, ஒரு ‘நிழலை’ ஆடச் சொல்லிக் கேட்கும் ’எதிரொலி’ என்று கார்ல் சாண்ட்பர்க் என்பவர் சொல்லுகிறார். இதில் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தமிருக்கிறது. எதிரொலிக்கும் உருவம் கிடையாது நிழலுக்கும் உருவம் கிடையாது. – எதிரொலி நகைச்சுவை-
“Prose is words in best order, poetry is best words in best order ‘ உரைநடை என்பது வார்த்தைகளின் சிறந்த வரிசை: கவிதை என்பது சிறந்த வார்த்தைகளின் சிறந்த வரிசை” என்று ஒருவர் கூறுகிறார். ஆனால் இதை முழுக்க ஒப்புக் கொள்ள முடியாது.ஏனென்றால் கவிதை வெறும் வார்த்தை அடுக்குகள் அல்ல.
1) Poetry is everywhere; it just needs editing. – James Tate
கவிதை எங்கும் இருக்கிறது ஆனால் அதை சற்றே செப்பனிட வேண்டும் என்கிறார் ஜேம்ஸ் டாட்டே. இதுதான் நமக்கு உபயோகமும் தேவையுமானது.கவிதை எங்கும் இருக்கிறது யாரிடமுமிருக்கிறது.
1) The poet doesn’t invent. He listens. – Jean Cocteau
கவிஞன் கண்டுபிடிப்பதில்லை அவன் கவனிக்கிறான் என்கிறார்- ழீன் காக்தே
ஆமாம் கவனிக்கிறவன் கவிஞன் ஆகிறான். நம்மைச் சுற்றி நிகழ்பவை எல்லாவற்றிலும் கவிதை இருக்கிறது.
’காட்சி’ என்று ஒரு கவிதை.’ பாதசாரி’ என்கிற கவிஞர் எழுதியது.
காட்சி
என் பார்வையைப் பறித்துச் சூடிக்
கொண்டு போனது ஒரு காட்சி
காக்கி உடையில் ஒரு பெண் போலீஸ்
பஸ்ஸுக்கு காத்திருந்தாள்
I

தன் கைக்குழந்தையைத் தோள் சாய்த்து.
இந்தக் கவிதையை நன்கு கவனியுங்கள். ஒரு சாதாரணக் காட்சி ஐந்து வரிகளில் சொல்லப் படுகிறது. ஆறாவது வரியில் அது ஒரு மென்மையான உணர்வை எழுப்பி ஒரு கவிதையாகிறது. இதே பெண்போலீஸ் சாதாரண ஆடையில் இருந்தால், இந்த எஃபக்ட், அழுத்தம் கிடைக்குமா...? அது ஒரு பிரத்யேகமான காட்சியே இல்லை.
வாழ்வின் எல்லா அடுக்குகளிலும் கவிதை ஒளிந்திருக்கிறது என்பதைச் சொல்ல இன்னொரு உதாரணம்.
‘நறுக்கென்று
ஒரு சிறு கவிதை
எழுத முயல்கிறேன்
கொப்பரைத் தண்ணீரைக்
கவிழ்ப்பதை விட
எப்போதும் சிரமமாகத்தான்
இருக்கிறது ஒரு
பேனாவுக்கு மை அடைப்பது’
-இது கல்யாண்ஜி எழுதிய கவிதை. இன்றைய பாட்டில் தண்ணீர் உலகில், புதுப்புது ஜெல் பேனாக்களின் உலகில் இந்தக் கவிதை எங்கள் தலைமுறையில் ஏற்படுத்திய அதிர்வை இப்போதும் ஏற்படுத்துமா தெரியவில்லை.இப்பொழுது வீடுகளில் கொப்பரை இருக்கிறதா என்றே தெரியவில்லை. எதிர்காலத்தில் பல விஷயங்களை நாம் நம் குழந்தைகளுக்கு விளக்க முடியுமா தெரியவில்லை. நாங்கள் எல்லாம் ஆற்றில்,கிணRRilRRற்றில் குளத்தில் குளித்தோம் என்பதை எப்படி விளக்கமுடியுமா.- you mean six-
ஆனால் எப்போதுமிருக்கிற சில விஷயங்களை,சில எளிய சந்தோஷங்களை, எந்த உலகமயமாக்கலும், எந்தப் பன்னாட்டு நிறுவனங்களும் கொள்ளையடிக்க முடியாது. பள்ளிக்கு வழியனுப்புகிறாள் வீட்டுவாசலில் நின்று குழந்தைகளை., ஒரு தாய். குழந்தைகள் கொஞ்சம் தள்ளிச் சென்றதும் அம்மாவை அழைத்து ஒரு பறக்கும் முத்தம், ஃப்லையிங் கிஸ் தருகின்றன.அது அம்மாவை வந்து சேர்கிற இடைப்பட்ட சொற்பக் கணத்தில் ஒரு வண்ணத்துப்பூச்சி அவர்களுக்கு இடையே பறந்து போகிறது. இப்படி அபூர்வமான காட்சி ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.
’குழந்தை அனுப்பிய
காற்று முத்தத்தை
இடையில் பறந்த
வண்ணத்துப் பூச்சி
வாரிச் செல்கிறது ”
என்று ஒரு கவிதை எழுந்தது என்னில். இன்றைய சுற்றுச் சூழலில் வேகமாகக் கரி படிந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தின் பலநிற வண்ணத்துப் பூச்சிகள் கூட எதிர்காலத்தில் இருக்குமா தெரியவில்லை. ஆனால் மனிதன் இருந்து கொண்டேதான் இருப்பான். அவன் பார்க்க வேறு எதுவும் இருக்குமா இல்லையா என்றாலும். தி.ஜானகிராமன் சொல்வது போல கை ரேகையையே ஒரு நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டிருக்கலாம்,அதில் வியப்பதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. -மேடுகள் ரேகைகளின் பெயர்பற்றிய சிறு விளக்கம்-

தி.ஜானகிராமன் சொல்வார்
பார்ப்பதற்கும் வியப்பதற்கும்
விஷயமாயில்லை
கை ரேகையையே
ஒரு நாள்முழுக்கப் பார்க்கலாம்

பார்த்துக் கொண்டிருந்தேன்
முதலில்
முட்டுச்சந்துகளாகத் தோன்றிய
ரேகைகள்
மேடுகள் தாண்டி
ஓடும்
கடலுள் வழியும்
நதிகளாயின
நவீன எழுத்தாளர்களை விடுங்கள். கம்பனின் ஒரு பாடல்
எண்ணுதற்கு, ஆக்க, அரிது/ இரண்டு மூன்று நாள்/விண்ணவர்க்கு ஆக்கிய/
முனிவன் வேள்வியை / மன்னினைக் காக்கின்ற /மண்ணின் மைந்தர்கள்/
கண்ணினைக் காக்கின்ற/ இமையிற் காத்தனர்..
காத்தன்ர் திரிகின்ற/ காளை வீரரில் /மூத்தவன், முழுதுஉணர் /முனியை நோக்கி, முன்னி நீ/ தீத்தொழில் இயற்றுவர் / என்ற தீயவர்,/ஏத்த அருங்குணத்தினாய் வருவது/ என்று என்றான்.
-கம்பர் கதை-
இப்படி நாம் உரைநடையில் விவரிக்கப் பல வெளிகளைத் திறந்துவைப்பதே கவிதை.
இந்த மாதிரி உடற்கூறு விஷயங்களை 1300 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி கவனித்து இருக்கிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது.இவ்வளவு ஏன்.” எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்’என்று அளந்து வைத்திருக்கிறார்களே அது ஒரு அபூர்வ அவதானிப்பு இல்லையா. – ஒரு அடிக்கு 12 அங்குலம் எப்படி வந்தது ஒரு கதை-
அதனால்த்தான் கவிதை எங்கும் இருக்கிறது ஆனால் அதை சற்றே செப்பனிட வேண்டும்என்று கூறுகிறார்கள்
ஒருவரது உடலின் உயரம் அவரவர் கையின் எட்டுச்சாண் என்பது போல பல சொலவடைகளை அனுபவித்துச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
1.அவசரத்தில அண்டாவுக்குள்ள கூட கை போகாது.
2.ஆழாக்கு அரிசின்னாலும் அடுப்புக் கட்டி மூனு வேணும்லா...- அரை லிட்டர் அரிசி-
3.தான் போகவே வழியைக் காணலியாம் விளக்குமாத்தையும் சுமந்து கிட்ட்ப் போச்சாம் மூஞ்சூறு
இப்படி நம்மைச் சுற்றி நிகழும் மனித, மிருகச் செயல்பாடுகள் தவிர்த்து இயற்கை தரும் பிரமிப்புகள் ஆயிரம்.
மலை உச்சியிலிருந்து ஹோ வென்ற ஓசையுடன் தரையில் மோதுகிற அருவி
தாகூரை எப்படி ஒரு கவிதை எழுத வைக்கிறது.பார்க்கலாமா
தன்னை / விடுவித்த மலையுச்சிக்குக்/கேட்கும்படி தரையில்/ சத்தமாய் மோதி/ நன்றி கூறுகிறது/அருவி./
*
புல்லின் மீதான/ பனித்துளிகளைத்/ தாவித்தாவி காவல் காக்கின்றன/ வெட்டுக்கிளிகள்
தாகூர் ஒரு மகாகவி, நாம் அவரை தேசிய கீதத்தில் பத்திரமாகப் பொதிந்து வைத்து விட்டோம். அவரின் ஸ்ட்ரே பேர்ட்ஸ் அற்புதமான தொகுப்பு.ஹைகூ கவிதைகளை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தும் தொகுப்பு அது. தாகூர் பற்றி இன்னொரு செய்தி-90வயதில் ஓவியம் கற்றவர்.
இயற்கையிலிருந்து யார்தான் கற்கவில்லை
”வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத் தனையது உயர்வு”
ஆனால் சில விஷயங்கள் கூர்ந்து கவனிக்கிற சிலருக்கே, சிலபொழுதுகளில்த்தான் வாய்க்கும்,
ராஜ சுந்தரராஜனினொருகவிதை
கொடுப்பினை
இரா முழுக்கத்/தவமிருந்தன /வான் நிறைய மீன்கள்/பரிதியை நேர் நின்றுகண்டதோ/விடிய(லில்) வந்த ஒரு வெள்ளி.
உங்களுக்கு சில தலைப்புகளில் கவிதை எழுத நண்பர்கள் பயிற்சி தருவார்கள்.ஒரு தலைப்பின் கீழ் கவிதை எழுதுவது என்பது ஒரு கவிஞரின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிற விஷயம். ஆனால் ஒரு தலைப்பு அல்லது பொருள் பற்றி நம்முடைய அறிதல் விசாலம் எப்படி இருக்கிறது என்று பயிற்சிக்கு இது உதவும். உதாரணமாக,நிழல் பற்றி எப்படி மூன்று வெவ்வேறு பார்வைகளில் யோசித்திருக்கிறார்கள் பார்க்கலாம்.
உச்சி வெயிலுக்குப் பயந்து/அஸ்திவாரத்திற்குள் பதுங்குகிறது/கோபுர நிழல்
ஒருதலைக்காதல் என்கிற தலைப்பில் ஒருகவிதை,
என்ன செய்தும்/ இவன்காலடியில் தலை வைத்துப் /பணியமறுக்கிறது நிழல்/ இவனின் நிழல்.
இவையிரண்டும் என்னுடைய கவிதைகள் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டவை.
தகுதி என்ற தலைப்பில் ராஜ சுந்தரராஜன் கவிதை,
தகுதி: ஒரு பறவையிட்ட/ எச்சத்தின் / நிழலில்/ அயர்கிறோம் நானும் என் மந்தையும்/ அது மரமாகி நிற்கிறபடியால்.
நாலடியாரில் நல்ல நட்பை மாலைநிழலுக்கும்,அல்லாத நட்பை காலை நிழலுக்கும் ஒப்பிட்டு ஒரு பாடல் இருப்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.
இப்படி பல பார்வைகளை விவரிக்கிறதால் நாமும் இப்படிச் சொல்லலாம். உரைநடை என்பதை குடை நிழல் அல்லது மர நிழல் என்று பெயரிட்டால் கவிதையை கார்மேக நிழல் என்று சொல்லலாம். நாம் பார்ப்பதில் இருந்துதான் கவிதைக்கான கரு கிடைக்குமென்பதில்லை படிப்பதிலிருந்தும் கிடைக்கும். உதாரணமாக,
அம்மணப் பூக்களின் கற்பைப் பற்றி கனவைப்பற்றி யாருக்கென்ன கவலை
அடீ பாஞ்சாலிகளே நீங்கள் கர்ணன்களைக் காதலித்தென்ன பயன்/ஐந்து பேர் கூறு போட உங்களை வெல்லப் போவது / அர்ஜுனர்கள்தானே.,”
அடி சீதைப்பெண்ணே /உன் சுயம்வரத்தில்/கௌசிகனே /வில்லொடித்திருக்கலாம்/உன் பர்ணசாலைப் பிரசவம்/முதலிலேயே நிச்சயப்பட்டிருக்கும்./ மூலஸ்தானம் புகமுடியாத/ தாழம்பூக்களின்சாபம்/அலைபாய்கிற அரளிகளுக்கில்லை
நான் சுயம்வரித்திருக்கிற/ வாழ்க்கை/என் தவிர்ப்புகளின் மீது/உருவானது/ முயலகத் திமிறல்களுக்காக/ நான் முகஞ்சுளிக்காமல்/ நர்த்தன லௌகீகமென நான் சிரித்துத் தொலைக்கிறேன்.
பார்ப்போம் படிப்போம் படைப்போம் என்று சொல்லி இப்போதைக்கு அமர்கிறேன்.

Monday, November 18, 2013

கவிதை பற்றி,

கவிதை மதிப்பீடு
=================
1. வடிவம் [ Form ] 2. தரிசனம் [Vision]  3.புதுமை. [Novelty]

ஒரு கவிதையை நாம் ரசிக்கும்போது பெரும்பாலும் அதன் வடிவத்தையே ரசிக்கிறோம். ‘எப்டிச் சொல்றான் பாரு கவிஞன்’ என வியக்கும்போது கவிதை சொல்லப்பட்டிருக்கும் முறையே நம்மைக் கவர்ந்திருப்பது தெரிகிறது.

அதேவரிகளை வேறுவகையில் சொல்லியிருந்தால் அதை கவிதை என்றே சொல்லியிருக்க மாட்டோம். அந்த அமைப்பு அல்லது வெளிப்பாட்டையே வடிவம் என்கிறோம்.

வடிவம் என்பது மொழிவெளிப்பாட்டின் ஒரு முறை. மொழியில் உருவாக்கப்படும் ஒரு கட்டமைப்பு. அந்த வடிவத்தில் உள்ள துல்லியமே நம் கவிதையனுபவத்தை தீர்மானிக்கிறது.

பலவரிகளில் சொல்லவேண்டியதை சுருக்கமாகச் சொல்லி, அல்லது வேறொன்றைச் சொல்லி குறிப்புணர்த்தி, அல்லது சொல்லவேண்டியதை மௌனமாக்கி நம் கற்பனைமூலம் அங்கே செல்லவைத்து கவிதை தன் கவிதை அனுபவத்தை நிகழ்த்துகிறது.

எது நல்ல வடிவம் என்றால் எது சிறப்பாக அதன் விளைவை நிகழ்த்துகிறதோ அது தான்.

எது நல்ல சிறகு என்றால் எது நன்றாகப் பறக்கச்செய்கிறதோ அது.

அழகான கவிதை என்றால் என்ன, அழகாகச் சொல்லப்பட்ட கவிதை. அழகான வடிவம் கொண்ட கவிதை. கவிதையின் அழகியல் என்பது முழுக்க முழுக்க வடிவம் சார்ந்ததே.

ஆனால் ஒரு கவிதையை நாம் மகத்தானது என்று சொல்லவேண்டுமென்றால் அது  அழகானதாக இருந்தால் மட்டும் போதாது. ஆழமும் இருக்க வேண்டும் என்கிறோம். அது நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்படவேண்டும். நம் அனுபவங்களை விளக்க வேண்டும். நாம் அறிந்தவற்றை மேலும் விரிவாக்க வேண்டும். நமக்குத்தெரியாதவற்றைச் சொல்ல வேண்டும். நாம் உள்வாங்கிய அனைத்தையும் புத்தொளியில் தொகுத்துக்காட்டவேண்டும். இதையே கவிதையின் தரிசனம் என்கிறோம்.

கவிதையின் தரிசனம் ஓர் அறிவியல் சூத்திரம் போல நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அது விரிவான தர்க்கத்துடன் முன்வைக்கப்படவேண்டுமென்பதில்லை. 

அதை கவிஞன் சொல்லும்போதே நாம் அதனுடன் இணைந்துகொள்கிறோம். ஆம் ஆம் என்று அதை ஏற்று நம் அகம் முழங்குகிறது. கவித்துவ தரிசனம் என்பது ஒரு மின்னல் மட்டுமே. அந்த மின்னலில் அது உலகை முழுக்கக் காட்டித்தருகிறது.

சிறந்த கவிதையின் தரிசனம் அதன் வடிவத்தை தீர்மானிக்கிறது. அதன் வடிவம் அந்த தரிசனத்தை உருவாக்குவதற்காக மட்டுமே பிறந்தது போலிருக்கிறது. அவற்றைப் பிரிக்கவே முடியாமல் ஒன்றாகவே நாம் எந்நிலையிலும் உணர்கிறோம்.

மூன்றாவதாக அந்தக் கவிதை நாம் அதுவரை வாசித்த கவிதைகளில் இருந்து சற்றேனும் புதிய அனுபவமாக இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். கம்பன் தமிழின் மகத்தான கவிதைகளை எழுதிவிட்டான். அதன் பின்னரும் நாம் ஒரு கவிஞனிடம் என்ன எதிர்பார்க்கிறோம்? புதுமையை. நேற்று இல்லாதிருந்த ஒன்றை. அடுத்த கட்ட நகர்வை.

இன்றைய ஒரு நல்ல கவிதை இந்த அளவுகோல்களால்தான் இயக்பாகவே அளவிடப்படுகிறது.

Sunday, June 19, 2011

கவிதை பற்றி

மொழியியல் பேராசிரியரான தாங்கள் மரபுக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் அடிப்படையில் என்ன மாறுபாட்டினைக் காண்கிறீர்கள்?

""மொழியியலைப் பொறுத்தவரை நான் மாணவனாகவே இருக்கிறேன். கணினி மொழியியல் என்ற துறை இன்று வேகமாக வளர்ந்து வருகிறது. தாங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்- மரபுக் கவிதை ஒரு நிகழ்ச்சியைச் சார்ந்த அம்சம். ஓசை, ஓசை வழி இசை, இசை வழி இன்பம் என மரபுக் கவிதை பாடிக் காட்டும். ஆனால், புதுக் கவிதை என்பது வாசிப்பது என்ற புலப்பாடு. இதனையே பாரதி "வசன கவிதை' என்றார். பின்னால் புதுக் கவிதை யாகி புற்றீசல் போல் புறப்பட்டு அன்றைய தினமே மடிவது ஏராளம்.

எந்தக் கவிதைக்கும் கருத்து புலப்படுத்தல் என்பது முக்கியம். மரபுக் கவிதையோ புதுக் கவிதையோ- கவிதைக்குரிய இசை, ஓசை இணைந்திருத்தலே கவிதை. அப்படி இல்லாமல் இருந்தால் அது கதை, கவிதைக்கேற்ற விதை.

பகடி (டஹஞ்ர்க்ஹ்) என்பதோர் இலக்கிய வகை. முதல் நூல் ஒன்றை நையாண்டி செய்து அதைப்போலவே எழுதும் நடை. இதனை,

"சிறப்போடு பூனை இறப்பில் இறப்பின்
புறப்பட மாட்டா முதலி'
என ஆவுடையப்ப பிள்ளை அவர்களும்;
"அழுக்குடையார் என்றும் குளிப்பர்; குளியார்
அழுக்கிலா யாக்கையவர்.'

என தங்கப்பாவும் குறளுக்கு இணையாக நகைப்பாவைத் தந்தனர். மேலும் தங்கப்பா புறநானூற்றை ஆங்கிலத்தில் எழுதி பெங்குவின் வெளியீடாக உலக நாடுகளைச் சென்றடைந்து பெயரினைப் பெற்றது.

புதுமைப்பித்தன், பாரதிதாசன் என பலர் புதிய வடிவங்களை கவிதை உலகுக்குத் தந்தனர்.

எனது ஆசான்களில் ஒருவரான மறைந்த புலவர் த. கோவேந்தன் "புதுநானூறு' எனும் பழந்தமிழ் இலக்கியமான புறநானூற்றை ஒட்டி நம் சமூக இழிவுகளை சட்டையர் மூலம் புதிய வீச்சினை கவிதை உலகுக்கு தந்தார்.

உதாரணமாக,

"கோயிலின் வாயில் கோழி, ஆடு
ஆயின பலித்தடை அந்நாள் ஆக்கினர்.
இந்நாள் -
மாந்த உயிர்களை மகிழ்ந்து பலி இடும்
அரசாள்வோரின் திறங்களில் ஒன்றே'

என 1985-களிலேயே படைத்துள்ளார். இது இன்றைக்கும் பொருந்தும் ஒரு புதுநானூறே.

மேலும் "குறும்பா' எனும் இலங்கை மஹாகவியின் பாவினத்தை ஒட்டி புது கவிதை வடிவினை தமிழக்கு அறிமுகப்படுத்தியவர். அதில் ஒன்று:

"வாயளவில் முற்போக்குப் பேசி
வாழ்க்கையிலே நற்போக்கை ஏசி
வாய்ப்புக் கேங்கிப் பாய் விரித்து
வல்லாண்மை காட்டுகிற
தாய்நாட்டின் அரசியலோ சீ சீ'

என்ற கவிதையும் இக்கால நடப்பியலைக் காட்டுவதாய் இருக்கிறது. இத்தகைய முயற்சியை யாரும் மேற்கொண்டதாய் தெரியவில்லை. இது குறித்து இக்காலத் திறனாய்வாளர்கூட மறுதலிக்கிறார்கள்- மறக்கடிக்கச் செய்கிறார்கள். இது வேதனைக் குரியது''.
தமிழ்- தமிழ்க் கவிதைகள் சமகால வரலாற்று வெளிச்சத்தில் வெற்றியும் வீழ்ச்சியும் எது எனக் கருதுகிறீர்கள்?

""இது ஒரு முக்கிய கேள்வி. தமிழ்க் கவிஞர்கள் சங்ககாலம் தொடங்கி இன்று வரை தமிழக வரலாற்றினைப் பதிவு செய்கிற ஆவணங்களாகவே பயன்படுத்தி இருக்கிறார்கள். தமிழுக்கு - தமிழனுக்கு ஏதேனும் ஊறு நடந்தால் அதனை எதிர்க்கும் சிங்கங்களாக இருந்தனர்.

பாரதி, பாரதிதாசன், தமிழ்ஒளி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், பெருஞ்சித்திரனார், தங்கப்பா, கண்ணதாசன் முதல் என்தந்தையார் வா.மு. சேதுராமன் வரை தொடர்ந்து தமிழ் கவிதை உலகுக்கென இத்தகைய சமூகச் சாடல்களோடு தங்கள் கவிதை களை யாத்தனர். சமகால வரலாற்றினைக் கண்டறியும் ஆவணங் களாக தங்கள் கவிதைகளைப் பதிவு செய்தனர்.

"பீரும் குளமும் அந்நியர்களாயின
ஆடும் மாடும் அமைச்சர்களாயின.'

- இந்தக் கவிதை கவிஞர் கண்ணதாசனின் வரிகள்.

தமிழக நதிநீர் பிரச்சினை, எல்லைப் பிரச்சினையை இரண்டே வரிகளில் சொல்லிவிடுகிறார். பீர்மேடு, தேவிகுளம் போன்ற நீர்வளம் மிக்க தமிழ் நிலம் அன்றைய அரசியல் தலைவர்களின் விழிப்புணர்வு இன்மையால் அண்டை மாநிலத்துக்கு தாரை வார்க்கப்பட்டன. இதன் வரலாறு நீண்ட நெடியது.

 , "குடியரசு' இதழில் முதல் பக்கத்திலேயே கவிதை வெளியா கும். அந்தக் கவிதைகள் சமகால பிரச்சினையின் ஆவணங்களாக இருக்கும். உதாரணத்துக்கு, "செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்ற பாட்டின் மெட்டில்,
சமகால கவிஞர்கள் கவிதை வரலாற்றின் ஊடே ஒரு வரலாற்றி னையே உண்டாக்கலாம். தமிழுக்காக நடைப் பயணம் மேற் கொண்ட என் தந்தையார், கண்ணதாசனின் "தைப்பாவை'யைப் போல "தமிழ் நடைப்பாவ
ை' என நடைபாதை வரலாற்றினை கவிதையாகப் பதிவு செய்தார். இதைப்போல சுரதா, தெசினி, நா.ர. நாச்சியப்பன், பொன்னடியான் என திராவிட இயக்கக் கவிஞர்கள் தம் கவிதைகள் மூலம் தமிழக வரலாற்றினைப் படம் பிடித்துள்ளனர்.

புலவர் குழந்தையின் "அரசியல் அதிகாரம்', கவிஞர் கருணானந்தத்தின் "அண்ணா காவியம்', பெரியாரின் "பெண் கல்வி', புலவர் பண்ணனின் கவிதை ஆக்கங்கள் எல்லாம் தமிழ், தமிழர் வாழ்வியலை கவிதைகள் மூலம் வென்றெடுத்தனர் என்பது வரலாறு. மரபுக் கவிதைக்கென்ற தனித்த வரலாறு உண்டு. அதனை எவராலும் அழிக்க முடியாது''.

சென்ற தலைமுறை படைப்பாளிகளைப் பட்டியலிட முடிகிறது. தற்கால தலைமுறை படைப்பாளிகளைப் பட்டிய லிட முடியவில்லையே? இது எதனைக் காட்டுகிறது?

""இதற்கெல்லாம் கால வேறுபாடுதான் காரணம். தலைமுறை இடைவெளி என்பார்கள். சென்ற தலைமுறை தாளும் கோலுமாக தமிழ் முரசாய் பறைசாற்றி சாதனை படைத்தனர். இன்றைய தலைமுறை ரிமோட், டிவியும், கணினியுமாக இருக்கிறார்கள். இன்றைய ஊடகத்தின் வளர்ச்சி பெரும் தீங்கான படைப்புகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. இளைஞர்கள் இதற்குப் பலியாகி வருகிறார்கள்.

"ஏற்றிற்கு உரியவர் கயவர் ஒன்று உற்றங்கால்
விற்றகுரியர் விரைந்து'

எனும் குறளுக்கு ஒப்ப நம்மை விற்பதற்கு எல்லோரும் விரைந்து கொண்டு இருக்கிறோம். ஒவ்வொருவரின் வேகம் மாறுபடலாம். சமூக விழுமியங்களோடு பயணிக்கும் விழுதுகளே இளைஞர்கள். இவர்களைக் காப்பாற்றுவதற்கும் பேணுவதற்கும் எந்த அமைப்பும் இல்லை. இதற்கெல்லாம் காரணம் தொடர்ந்து வரும் தாராளமய சந்தைப் பொருளாதாரம் எனும் சாக்கடைப் பொருளாதாரம். எல்லாவற்றையும் நுகர்வு கலாச்சாரம் விழுங்கி வருகிறது.''

Friday, June 17, 2011

கவிதை பற்றி

 புதுக்கவிதைக்கும் பழங்கவிதைக்கும் பொதுவான விஷயங்கள் .
++++++++++++++++++++++++++++++++++++++++++ 
1.வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒரு தரம் ஒலித்து, உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பது . 
2 எந்தக் காலத்திலுமே வாழ்க்கை எந்தக் காலத்து மனிதனுக்கும் சிக்கலானதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அந்தந்தக் காலத்து கவிதை - நல்ல கவிதை - அந்த காலத்து சிக்கலை அப்படியே தருகிறது நமக்கு. அப்படி இன்றையப் புதுக்கவிதை இன்றைய வாழ்க்கைச் சிக்கல் தொனிக்க அமைந்திருக்கிறதா என்பது. 
3.இன்றைய வாழ்க்கைச் சிக்கலையும் புதிரையும் போலவே முதலில் புரியாதது போல இருந்து, படிக்கப் படிக்கப் புரியத் தொடங்குகிறதா என்பது . 
4. நள்ளிரவில் விழித்துக் கொள்ளும்போது, இந்தக் கவிதையில் ஒரு அடியாவது திடுதிப்பென்று காரணகாரியமே இல்லாமல் மனசில் தானே தோன்றிப் புது அர்த்தம் தருகிற மாதிரி இருக்கிறதா? 
                 எந்தக் கவிதையைப் படித்துவிட்டு - ஆம், ஆம், ஆம், ஆம் என்று பதிலளிக்க முடிகிறதோ, அந்தக் கவிதை நல்ல கவிதை .