Showing posts with label மரபுக்கவிதை. Show all posts
Showing posts with label மரபுக்கவிதை. Show all posts

Wednesday, September 1, 2010

நீ...நீ...நீர்...நீர் !!! 3


கிடக்கும் இடத்தில்--அடங்க
         உடலை வடித்தேன்
இடறி விடாமல்--நிறமும்
         எடுத்து முடித்தேன்

விடாமல் தொடரும்--மடமைப்
         பிடியில் கிடப்போர்
விடுபடப் பாடம்---பேசாமல்
         புகட்டி விட்டேன்

சாக்கடை யாகநான்--சகதிக்
         குட்டை யாகநான்
போகும் போதுநான்--முழுப்
         பரிசுத் தமாகி

ஆவி யாகி--நான்
         அசுத்தம் போக்கி
தாவி ஏறி--வான்
         உயரும் உயர்வில்

கசிந்து பொசிந்து--கீழே
         ஊறி மாறி
சுத்தி கரித்து--நிதம்
         பத்திரங் காத்தேன்

கீழேயும் மேலேயும்--நான்
         சுத்தம் உன்னோடு
வாழும் பூமியில்--நாடே
         அசுத்தம் அசுத்தம்

கற்ற பாடச்--சுமை
         காற்றிலா? சுயநலம்
சுத்த மில்லை--நகரோ
         சாக்கடைக் குளியல் !!!

நடைவண்டிக் கிளிகள் 2



அரும்பு இதழில் சிரிப்பு
         விருந்து வைக்கும் வார்ப்பு
கருத்தை உதைத்த உயிர்ப்பு
         கெஞ்சிக் குலவச் துடிப்பு

கள்ள மில்லாச் சிரிப்ப
         துள்ளித் தவழும் களிப்பு
உள்ள மெல்லாஞ் சிலிர்ப்பு
         உள்மன துள்ளே குதிப்பு

நாலு காலு நடையும்
         நிலமே நோகா விரைவும்
பாலூட்டுந் தாய்க்குக் காட்டும்
         பன்முறைக் கண்ணாமூச்சு ஆட்டம்

பாட்டன் பாட்டிக்கு ஓட்டம்
         பட்டு மேனி காட்டும்
தொட்டுத் துடைத்து ஊட்டும்
         திகட்டாப் பாட்டி பாசம்

கொழுகொழு பாப்பா குலுங்குது
         குறுகுறு சிறுகால் விரையுது
பளபள பலகண் பருகுது
         புதுப்புதுப் பரவசம் பெருகுது

கிள்ளவும் அள்ளவும் துடிக்குது
         கையது மெய்யதைப் பிடிக்குது
அழகது விழுந்து மிதக்குது
         ஆனந்த இதயம் பூக்குது !


Monday, June 7, 2010

அசைந்தால் 01

நாவசைந்தால் நாடசையும் நன்மை நடக்கும்
........ நரம்பசைந்தால் இசைபிறக்கும் நாதம் பிறக்கும்
பூவசைந்தால் மணம்பரவும் பொசியுந் தேனும்
........ புள்ளசைந்தால் வானளக்கும் பாதை பிறக்கும்
கா(ல்)வாய்நீர் அசைந்தாலே கழனி செழிக்கும்
........ கதிர்க்குலைகள் அசைந்தாலே கும்பி குளிரும்
மேவிமேகம் அசைந்தாலே மழையாய்ப் பிழியும்
........ பருவகாலச் சிறப்பாலே பசுமை அசையும்

அவள்அங்கம் அசைந்தாலோ ஆசை பிறக்கும்
........ வளைவுகளைக் கண்டுவிட்டால் ஆண்மை துடிக்கும்
அவள்கண்கள் அசைந்தாலே அர்த்தம் இருக்கும்
........ அகராதி அகத்துள்ளே நுழைந்து புரளும்
அவள்அழகு சதுராட சிந்தை செயலும்
........ அந்தரத்தில் ஏறிவிடுது இன்ப மயக்கம்
அவள்குழல்மென் தமிழினிய இசையில் ஓலிக்கும்
........ அவள்என்னை மயக்குகிறாள் அந்திக் கிரக்கம்