Showing posts with label பதநீர். Show all posts
Showing posts with label பதநீர். Show all posts

Monday, March 23, 2015

பதநீர் 13 *

பதநீர்  13

ஆழ் தரை
உறிந்து


நீள் வான்
சொரிந்து


தேன் சுவைத் தெளி நீர்
பனை நீர்
அது
பதநீர்  !


சிறு துளி சேர்ந்து
இராப் பகல் திரண்ட
பதநீர் திரிந்தால்
பொங்க்ங் கள்


பக்குவங் காக்க
அனுபவங் கண்ட
அரு மருந்தே
சுண்ணாம்பு


மட்டை வெட்டி
தல்லிச் சதைத்து
தூரிகையாக்கின்
பெயர்
கலக்கு மட்டை



சுண்ணப் பொடி தொட்டு
கலசத்துள் தடவி
பழுதடையா பதநீராய்க்
காப்பது
படி பல கடந்த
பரம்படைத் தொழில்
நுட்பம்


தாய் கைச்
சமயல்
உப்பு உறைப்பு
கலப்பின் சுவையாய்
பதநீல் அளவும்
சுண்ண அளவும்
சரி விகிதம் அமையும்


கூடின் சுண்ணாப் பால்
குறைந்தால் சளிக்கும்


கூடின்
வெயில் காற்று


குறையும்
துளி விழு வேகம்
அளவும்


வந்த மந்த மாருதம்
பருந் துளி
பெரும் பட படப்பைக்
கூட்டிவிடும்


பொருளைப் பாத்து
சேர்ப்பது
சமையல் உப்பு


பாரா பதநீருக்கோ
பாளை முகம் பாத்து
வரப் போகும் பதநீருக்கு
கணித்துக் கலக்க வேண்டும்
சுண்ணம்


அது அவர்
கலைக் கை நுட்பம்


யானைக்கு மட்டுந்தானா
தன் பலம் தெரியாத்து ?


இவர்கள் என்னவாம் !!!











Tuesday, March 3, 2015

பதநீர் -12

பதநீர்-12
--------
பழம் பனை
புதுப் பாளை
நீட்டுது


சில்லாட்டைப் பிடியில்
மட்டைக்கு இடையில் .


மண்ணில் கால்
விண்ணில் தலை


ஆழத்தில் வேர்
நீளத்தில் நீர் .


ஒற்றைப் பனை
ரெட்டைப் பனை
வரிசைப் பனை
கும்பல் பனை


மேடா பள்ளமா
காடா கரையா ?
கவலையே இல்லை !


குட்டைப் பனை
நெட்டைப் பனை
சாய்ந்த பனை
நிமிர்ந்த பனை
அனேகம்
நட்டதில்லை !


ஓர் ஆண்டுக்கு
ஒரு தரமே வரும்
பாளைப் பருவ காலம்


வித்தகக் கை
தொட்டுத் தட்டிக்
கொட்டித் திருத்த


ஈரம் ஊறும் திறம்
பெறும் பாளை


திரண்டு உருண்டு
விழும் புது நீர்
அது
பதநீர் !


புல் இனம் பனை
நடுத் தண்டுள்
வெண் பஞ்சுச் சோறு
அங்கே தேங்கும் சாறு


எங்கிருக்கோ பதநீர் ?

ஊற்றில்லை
உடைப்பில்லை
வரம்


மரம் மனிதர்
பட்ட காயம்
கொட்டும் உள்ளிருந்தே
ஆற்றும் திரவம் !


வேம்பு பிசின்
கள்ளி பால்
மனிதர் ரத்தம்
பனை நீர்


விரைந்து சுரந்து
உறைந்து வந்த
மருந்து .


பாளை இடுக்கி நசுக்கி
பதநீர் கசியும் வரை
பக்குவ மாக்கும்
பண்பட்ட
தொழில் நுட்பம்


பதநீரைச் சிறைப் படுத்தி
பக்குவ மாக்கிக் காக்கும்
கலசம் !


கசி துவாரக்
கதவடைத்துப் பூட்ட
முயலும் இயற்கை


தடுக்கும் பணி
தொடுக்கும் தொழிலாளி

காலை மாலை
பாளை சீவும்
போராட்டம் !


சீவல் கூடிப் போனால்
குறையும் பதநீர் காலம்

சவரக் கூர்
அரிவாள்
சருகாய்ச் சீவி
நீண்டு போகும் ஆயுள்


பாளைத் துளிகள்
கலசத்துள்
சரண்டையும் வரை


பதநீர் ஆட்சி நீட்சி !


Wednesday, February 18, 2015

பதநீர் 11-18/02/2015. * *

பதநீர் 10.
------------
கால் கீழ்
நீள் வேர்
ஆழ் குழாய்


தேர்ந்தெடுத்து
உறிந்தெடுத்து


பனம் பாளை
பக்குவத்தால்
தலைக்கெடுத்து


துளித் துளியாய்த்
தந்திடும்
புது நீர்
அது
பதநீர் !


கன்னல் கருப்பெட்டியைக்
கருவாய்ச் சுமக்கும்

தெளி நீர்
பிளி நீர்
பத நீர் !


மருந்துக்கும்
விருந்துக்கும்
தெரிந்தெடுத்து
காய்த்தெடுத்து
கடைந்தெடுத்த
கருப்பெட்டிக்குத்
தாய் நீர் !

தட்டிய பாளை
சொட்டிய முகத்தில்
கட்டிய கலசம்
முட்டிய பால்

தினம்
பட்ட பாட்டுக்குக்
கொட்டிக் கொடுக்கும்
பலன்


நித்திய சொத்தாய்
அதைத் திரட்ட
யுத்தியும் சக்தியும்
நிச்சயம் வேண்டும்


கறுத்த மரத்தை
வருந்திப் பழக்கி
சுறப்பைப் பெருக்கி
கறப்பது பதநீர்


உடல்
சூடு தணித்து
சுகத்தைக் கொடுக்கும்
பெலத்தைப் பெருக்கும்
பதநீர் !


காடும் மேடும்
பனை வளர்
தளமாயிருக்கும்


தானே முளைத்து
தானே வளர்ந்து
வந்து தந்த
உயர் வரம்


பருகரும் பதநீர்
சதா
பயன் நீர் !






 

Thursday, June 5, 2014

பதநீர் 10

பதநீர்  10

கறுப்பு மரத்துள்
வெளுப்பு இருப்பை
உணர்ந்த
ஞானக் கண்ணன்
பனைத் தொழிலாளி

வறண்ட நிலத்தில்
உருண்ட நீர் கம்பமாய்
எழுந்த தொண்டன்
பனை

மண்ணுள் வேரும்
விண்ணில் ஓலையும்
வடிகட்டிகளாய்
சுத்திகரித்து
வாழும்
நீண்டநாள்
தொண்டன் பனை

நூறு ஆண்டுகள்
உயர்ந்து உயர்ந்து
உயிர் வாழும்
நேரிய மரம்
பனை பனை
பனை மட்டுமே

கழை போல
சுற்றி வைரம்
மத்தியில் சோறு
சோற்றுள் பாதி சாறு

சோறெல்லாம்
இனிப்பு கலந்த நீரு

பனையுள் நாற்பது சதம்
நீர்

ஓலை ஓலையாய் விட்டு
அணு வணுவாய் வளர்ந்து
நூறு அடிகள் வளரும்
நூறு ஆண்டும் வாழும்

நீர் கம்கம் பனை
எந்த மண்ணுக்கும்
இல்லாத வறண்ட மண்
வரப்பிரசாதம்
வளர் நீர் கம்பம்
பனை

 பனியைத் தாங்கும்
உச்சிப் பனை ஓலை
உறுஞ்சும்
நிலத்து நீரை
வேர் நுனி

வற்றாத அந்தர
நீர் தேக்கம்
பனங் கண்டம்

எல்லா உயிர்களுக்கும்
உள்ள
காயத்தை ஆற்றும்
மருந்து சுரக்கும்
தானியங்கி அமைப்பு
உண்டு பனைக்கும்

அந்த எந்திரத்தை
ஒரு நிலையில்
இயக்கி வைப்பது
இடுக்கல்

அந்த நிலையில்
பனை பதநீரை
விருந்தாக வைக்கும் என்ற
உணர்வை
உள் உணர்வால் பெற்றவன்
பனைத் தொழிலாளி

பதநீர்
மனுக்குலம் வாழ
தெய்வீக அமுதம்

மனித உணவுள்
புனித நீர்
பதநீர் !

Thursday, May 29, 2014

பதநீர் 9


பதநீர்  9 /
-----------
பதநீர்
பலநீர் தேங்கிய
பனையுள்ளிருந்து
பதநீர் மட்டும் கறப்பது

பாலுள் நீரைப்
பிரிக்கும் அன்னப் பறவையிலும்
நுண் கலை !

கறந்த பாலை
நிரந்தரம் கெடாமல் காப்பது
மறு கலை !

காயுதப் பட்டம்
வாங்காமலே

ஆயுதந் தீட்டி
கைமேல் பலன் ஈட்டும்

சமூக சேவை
உழைப்பால் களைப்பில்லா

இனிய பதநீர்
தொழிலாளி !

ஓலை மட்டை
கூடிய உயர்

இயற்கை அலுவலகம்
பதநீர்  இறக்கும்
அற்புதம்

செம்மண் பூசிய
களிமண் கலசம்
காவி நிரம்

மழை வீழ் பூமி
மணம்போல

துளி வீழ் கலசம்
மண் வாசமும்
பதநீர் வாசமும்
கலந்து கமழும் !

மந்த மாருத சூழலில்
பனையுங் குளிரும்
பாளையும் உதிர்க்கும்
அதிகத் துளி
டக்..டக்..
சதி தாள வேகமாக

வெயிலும் வறட்சியும்
வந்தால்
துளி சுருங்கி
இனிமை கூடி
கலசத் தூரை மட்டும்
மறைக்கும்
பதநீர் வீழ்ச்சி

முட்டிக் கலசம்
முட்டிய பதநீர்
கட்டியே கிடந்தால்
காற்றும் சூழலும்
கலந்து
பதநீர்
சளித்து புளித்து
கள்ளாகிப் போகும் .

சளிக்காதிருக்க
எளிய வழியுங் கண்டார்
விழிப்புடனே  தொழிலாளி !

குட்டி போடாது
கொஞ்சிப் பாலும்
ஊட்டாத

ஓர் அறிவு மரம்
ஆறறிவு மனுக்குலங் காக்கப்
பதநீர்
தருமென்று
இவர்களுக்கு
எவர் சொன்னார் ?



Tuesday, May 20, 2014

பதநீர் 8

பதநீர்  8

இடுக்கிய பாளை
அடக்கிய காளை


பயன் எனில்
பார்க்க வேண்டும் தினம்


இடுக்கிய பாளையின்
துடிப்பு அதன்
துளிகளில்
தெரியும்


பதநீர்
துளிகளால்
பேசும்


கலயமும்
இடுக்கியவன்
இதயமும்
குளிரும்


இறுதிவரை
பாளை நீள
இறுதிவரை


 அவன்
பணியும் பக்குவமும்
தொடரும்


காலை மாலை
பாளை முகம்
பாராமல் ஓயான்
நோய் என்றும்
அசதி என்றும்
ஓயமாட்டான்


சீவச் சீவ
கொட்டும் பதநீரோடு
சிநேகமும்


நார் கிழித்து
கண்ணிக் கயிறு
முறுக்கி


கலசக் கழுத்தில் கட்டி

கண்ணிக் கலயம்
என்ற பட்டமும்
சூட்டுவான்


பாளையில் கலசம்
பனைக் கேற்றபடி
நிரம்பும்


நிறைந்த பதநீர்
குறையாமல் காக்க
மூடி போடணும்


ஓலை வெட்டி
கலச வாய் அளவு
மடக்கி


பாளை மேலிருந்து
கலசத்துள் சொருகி
மூடி


காக்கைகள் தள்ளிடாமல்
கட்டுப் போட வேண்டும்


இந்த மூடிக்கு
மடக்கு ஓலை
என்ற நாம்


ஆனாலும்
ஈ எறும்பை
தடை செய்ய
வழி எதுவும்
இல்லை
இன்றுவரை .

Sunday, May 11, 2014

பதநீர் 7

பதநீர்  7
--------
கறுப்புப் பனை தரும்
வெளுப்பு நுரைப்
பால், பதநீர்


அண்ணாந்து பாத்து
விண்ணுயர்
தொழில்


அந்தரத்தில் செய்யும்
சுதந்திரத் தொழிலின்
பலன் பதநீர்


அயர்வில்லா உயர்வில்
செய்யும்
தனித்துத் தொழில்


பனியும் வெயிலும்
தாங்கிச் செய்யும்
இனிப்புத் தொழில்


அக்கம் பக்க
உச்சிப் பனையில்
தக்க அனுபவத்தோடு
பரிமாறிக் கொள்ளும்
அனுபவத் தொழில்
வெற்றிச் சரங்கள்


பனங் குறும்பல்கள்
சிறுகச் சிறுகப்
பெரிதாகி

பருவ விருந்தாக

விம்மி விரிந்து
நுங்காகிப்
பழமாகி
கனிந்து விழுந்து
மறு சந்த்திக்கு
வித்திடும்


பெண் பனைகளும்
பால் தரும்


அதுவும்
இரு மடங்கு
காலமும் பதநீர்
அளவிலும்


பப்குவமாய் இடுக்கி
பாளை அரிவாள் கொண்டு


குறும்பை
பெருத்திடாமலும்
உதிர்ந்திடாமலும்
சீவி விட வேண்டும்


சவரக்கத்தி கூர்மையில்
பாளை அரிவாள்

தடமோ தடையமோ
இல்லாமல் பாளை சீவ
பனையின் சாரம் முழுதும்
பாளைத் தண்டிலே
திரளும்


பருவம் வந்த
பனைப் பெண்பாளையில்

குறும்பல் பெருத்து
இடையில் சிறுத்து
உடுக்கு அடுக்குகளாக
மாறி வரும்


இடுக்குங் கடிப்பு
வேறு வசதியோடு தேவை


கூன் விழுந்த இரு கம்பு
கூன்கள் எதிர் திசையில்அமையக்
கட்டப் பட்டிருக்கும்


கடிப்புக் கட்டின் பக்கம்
பாளையை அழுத்து முனை
அமையப் பெற்றிருக்கும்


சீராக இடுக்க
சிறந்த அமைப்பு
கை கொடுக்கும்


கட்டுப்பாளை
மூன்று மாத மென்றால்
பருவப்பனை ஆறு மாதங்கள்
கறந்து


ஆண்டுக்கொரு வசந்தம்
மீண்டு வரும் .




 

Tuesday, April 29, 2014

பதநீர் 6

பதநீர்  6

உயரத்தில் வேலை செய்தும்
தரை(யில்) மனிதருக்கு
அவர் உயர்வு தெரிவதில்லை


மரத்தைப் பழக்கி
பால் கறக்கும்
பனைத் தொழிலாளி

இவர்கள்

காளைக்கு மூக்கணாங் கயிறு
குதிரைக்கு கடிவாளம்
யானைக்கு அங்குசம்-இவை
மனிதர் அடக்கி ஆள


பனையைப் பிடித்தபடி  அடக்க
கடிப்பு


கடிப்புகள் மூன்று விதம்
கட்டுப் பாளைக்கு ஒரு முழம் என்றால்
அலவிரல் பனைக்கு ஒன்றரை
முழ நீளம்-கடிப்பு


கட்டுப் பாளையில் பால்
சுரக்க ஒரு முகம்

அலவிரல் பனைக்கோ
ஒவ்வொரு விரலிலும்
தனிமுகம்


பாளை வெடித்து
அலவிரல் விட்டால்
ஒரு பாளைக்கு
இருபது முதல்
இருபத்தி நான்கு வரை
அலவு வரலாம்


மூன்றோ ஆறோ
அலவுகளை நுழைத்து
ஒரு கலயம் கட்டலாம்


பதநீர் விழும்
வேகத்துக்குத்தக்க
கலயம் நிர்ணயிக்கப் படும்


கட்டுப்பாளை
மூன்று மாதங்கள்
பால் தந்தால்
அலவிரல்கள்
ஆறு மாதங்கள் சுரக்கும்


சுரக்கும் மட்டும் பால்
இறக்கப்படும்

பனைத் தொழிலுக்கு
எல்லாம்
அளவோடு வேண்டும்

பாளை அலவிரல் இடுக்க
ஏற்ற பருவம்
அனுபவக் கண்களால்
அளந்தெடுக்கப்படும்

பலனைக் கொண்டே
பனைமொழி புரியும்

அளவுக் கணிப்பை
மாற்றிக் கொள்ள
அனுபவமே பாடமாகும்

கண் அளக்காததையா
கை அளந்துவிடப் போகிறது ?



பனைக்குப்பனை
மாறுபடலாம்
இடுக்கல் முறை
அனுபமே ஆசான் !

பழக்கப்பட்ட கைக்கு
எல்லாம்
அடங்கிப் போகும்

சுவைப்போம்
அவர் அனுபவத்தால்
அலவுப் பதநீர்
யாவரும் !


Sunday, April 20, 2014

பதநீர் 5

பதநீர்--5
----------
 மஞ்சரி
என்ற
உரித்த பாளைத் தண்டு
இடுக்கப் பட்டாலும்
கிளைத்து வளர்ந்து கெட்டுப்
போகாத படி
சுற்றிக் கட்டப்படும்
ஓலைக் கீற்று நார் இறுக்கி

சீவிய பாளை
முகப்பில்
சிறுச் சிறுக
ஊறிய பதநீர் திரண்ட
பெருக்கில்
கனமாகி விழுந்திடும்
துளியாகி
கொஞ்சங் கொஞ்சம்
 வீழ்  துளி
வேகங் கூடிக் கூடி
கலயம் நிரம்பும்
கடு வேகக்
காட்சி  கண் குளிரும் !

பாளைப் பதநீர்
எப்படி கலயத்துள் ?

பாளையை முப்பது
பாகை(டிகிரி) பக்கவாட்டில்
சாய்க்க வேண்டும்

சய்ந்த பாளைக்கும் பனைக்கும்
இடையில் அடை
கொடுத்தாக வேண்டும்

இந்த அடை கொடுக்க
தொழிலாளி கண்டது
உடைந்த ஓட்டுத் துண்டு !

இறுதி வரை
உறுதியாய் நிற்கக்
கண் கண்டது
காலங் காலமாய்

கிராப்பு வெட்டியவன்
தலையாய்
சிறுத்திருக்கும்
பனை மண்டை

சுற்றிப் பாளை முகம்
தாழ்த்தப்படும்
பக்கவாட்டில்

ஆறு ஏழு பாளைகள்
ஒரு பனையில்
ஒரே நேரத்தில்
சாய்த்துக் கலயங்
கட்டப்படும்.


 மண்ணால் செய்த
பதநீர் கலயம்
பக்குவப் படுத்தி
நாரை முறுக்கி
கண்ணி செய்து
கலயக் கழுத்தில்
கட்டியதும் அது
கண்ணிக் கலயம்
என்றே
அழைக்கப் படும் !

பாளைக்கு மேல்
மட்டையில் கண்ணியால்
கட்டப் பட்டு

கலயத்துள் பாளை
நுழைக்கப் படும்
பனை ஓலையை மடக்கி
கலய வாயை அடைத்து
பதநீர் பாது காக்கப்படும்

இது மடக்கு ஓலை
நார் கொண்டு கட்டப்படும்

எந்த அடைப்பைப்
போட்டு வைத்தாலும்
ஈ எறும்பு வண்டு
வகேராக்கள் விழுந்தே தீரும்

பனஞ் சில்லாட்டை
கொண்டு அரித் தெடுக்கப்படும்
பதநீர்

இவைகளால் எந்த தீட்டும்
இல்லை !


 

Tuesday, April 15, 2014

பதநீர் 4 *

பதநீர்--4

மாதம் ஒரு ஓலை
மட்டைக்கு இடையில்
பாளை


ஓலையிலும் சிறிது
பாளை


ஓலையைத் தாங்கும்
கருக்குள்ள தண்டே
மட்டை


மட்டையைத் தாங்க
மட்டைக்கு ரெண்டு பத்தை

மட்டையைப் பனையோடு
இணைக்கும் கவட்டையாய்
இருக்கும் பத்தை


பத்தையைப் பனையோடு
பிடிக்க
சில்லாட்டை என்னும்
பன்னாடை இருக்கும்


தும்பு வலையாய்
பின்னப் பட்டிருக்கும்


காற்றுக்கு வழியும்
ஓலை பத்தை பனையுடன்
இறுக்கமாய் இருக்கச்
சுற்றி இருக்கும்


நீரோட்டத்  தும்பாய்
வளர்ந்து
அடுப்பெரியும்
விறகாக
முதிர்ந்து விடும்


பாளை இடுக்க
பத்தை சில்லாட்டையை
பனையிலிருந்து
அறுத்தெடுக்க வேண்டும்


மட்டைக்கு
இடையில் வளரும் பாளை
தனிமைப் படுத்தப்படும்


தனிப் பாளைக்குள்
கை விரல்கள் போல்
இளம்  அலவுகள் பொதிந்து
வைக்கப் பட்டிருக்கும்


பொதிந்த உறையை
நுட்பமாய் அகற்ற வேண்டும்


பொதி உறைகள்
அகற்றப் பட்டபின்
பாளை
வெண் தண்டாக
மேல் நோக்கி நிற்கும்

நுனி வெட்டப் பட்ட
வாழைத் தண்டாக
சீவப்பட்டிருக்கும்


பதநீர் சுரக்க
பாளையை
மேலும் தயார் படுத்த
வேண்டும்


கட்டுப் பாளை
கடிப்பைக் கொண்டு
இடுக்க வேண்டும்


பனை மட்டையில்
ஏறிய தொழிலாளி

வலப் பக்க மாகவே
மனையில் பனை
மண்டையில் சுற்றி வரவேண்டும்
இது எழுதாத சட்டம்

இதுவே  பாது காப்புக்கு வசதி
உத்தரவாதம்


வலக்காலை
பத்தை அறுத்த
இடத்தைப் படியாக்கி
ஊன்ற வேண்டும்


இடக்காலால்
குருத்து ஓலையோடு
மேல்நோக்கி நிற்கும்
மட்டைகளோடு
இடுக்கிப்  பிடித்துக்
கொள்ள வேண்டும்


பாளைக்கு நேர் மேல் உள்ள
மட்டையில்
நெஞ்சை வைத்து
தலை குப்புரப் படுத்து
தொழிலாளி

இரு கைகளாலும்
கடிப்பைப் பிடித்து
இடுக்குவார்


கடிப்பால் பாளை
அடியிலிருந்து
இரு கைகளாலும்
இறுகப் பிடித்து
பலங்கொண்ட மட்டும்
மேல் நோக்கி இழுப்பார்


கிர்  ரென்ற ஓசையோடு
நழுவுங் கடிப்புக்
கட்டைகள் மோதிப்
படீரென்ற ஓசை
எதிரொலிக்கும் !


இந்த இடுக்கோசை
பனங்காட்டில் நிறைந்
தொலிக்கும் !




 













































































 

Monday, April 14, 2014

பதநீர் 3

பதநீர்--3

இனிக்கும் பதநீர்
கசக்கும்
உழைபுக்குபுபின்


பனையும்
பூப்படையும்
ஆண்டுக்கு
ஒரு முறை


ஆணும் பூக்கும்
பெண்ணும் பூக்கும்


பெண்தான் காய்க்கும்
ஆண்தான் மகரந்தம்
உதிர்க்கும்


தேனீ ,குழவி
சிறு வண்டுகள்


மகரந்தம் எடுத்து
பெண் மடி
சேர்க்கும்


கருவுற்ற பசு
மடு வளர்வதாய்


பெண் பாளைக் குலை
குரும்பல் பிடித்து
கொஞ்சம்
கொஞ்சமாக
வடிவழகு பெறும்

நுங்காகி பழமாகி
விழுந்து
வம்ச விருத்தி
நடக்கும்


ஆண் பெண் பனைகளும்
மதுரமாய் பதனீர் தரும்


அந்த பாளைகளை
பருவம் பாத்து
பக்குவப் படுத்தும்
முறைமை
இரண்டு பனைகளுக்கும்
வேறு வேறு


அக் கலையில்
தேறியவன்
பனைத் தொழிலாளி


பல்லைப் பாத்து
மாட்டின் வயதைக்
கணிப்பது போல


பாளை உருவம்
ஒளி முகம் பார்த்தே
தக்க பருவத்தைக்
கணித்து விடும்
தகுதி பெற்றவன்
பனைத் தொழில் வல்லுனன்


இடுக்கும் பாளை
இளையதாய் இருந்தால்
இடுக்கைத் தாங்காது

முதிர்ந்து விட்டாலோ
திமிரிவிடும்
பலன் தராது


கண்களால் அளந்து
கருத்தாலே
கணிக்க வேண்டும்
தகுதியை


அதிகமாக
இடுக்கி விட்டாலோ
குருதி கொட்டும்


இடுக்கு
குறைவானால்
பலன் தராது
நிமிர்ந்து விடும்


குருதி என்பது
பதநீரை விட
கட்டியான திரவம்
கொட்டும்


அதன் மணம்
குணம் வேறு


மனிதர் குடிக்க
இயலாது


கருப்புக் கட்டிக்கு
ஆகாது


ஆண்பனைக்கு
கட்டுப் பாளை என்றும்


பெண் பனைக்கு
பருவப் பனை என்றும்
தொழில் பெயர்கள்


பருவப் பனை
கட்டுப்பாளை
தயார் படுத்தும்
தொழில் நுட்பங்கள்

வேறு வேறு

இடுக்கும் முறைகளும்
வேறு வேறு

இடுக்கு முன்னே
அந்நதந்த முறைமை படி
பனைகளைச்
சுத்திகரிக்க வேண்டும்


முதலில்
பனைந் தொழிலாளி
எந்தப் கனையிலும்
ஏறி இறங்கும்
தகுதி பெற்றிருக்க வேண்டும் .






 

Thursday, April 10, 2014

பதநீர் 2-10/4/14

பதநீர்
பனையைப்
பக்குவப் படுத்துவதாலே

காலால் எடுத்து
தலையால் தருவது


மண்ணும் விண்ணும்
காற்றும் வெயிலும்
சூழ்ந்த
கூட்டுத் தயாரிப்பில்
வருவது பதநீர்


உணர்த்த முடியாத
குணத்தைக் கொண்ட
மரத்தின்
செயலை உணர்ந்து
கறப்பது
பனம்பால்


மடியில்லை காம்பில்லை
எனினும்
பாளை முகம் பாத்துக்
கறப்பது
பதநீர்


பருவ காலம் பாத்து
பக்குவப் படுத்தி
காலந் தவறா
கடமை வீரனின்
உழைப்பால் வருவது
பனம்பால்


காலை மாலை
பனை இடுக்கி
பாளை சீவி
பக்குவஞ் செய்து

தோப்புக் கரணத்தை
தொழிலாய் ஏற்று
பனை
உயரத்துக் கேற்ற
ஏற்ற இறக்க
எண்ணிக்கை
கூடி குறையலாம்


கரணந் தப்பின்
மரணமும் தழுவலாம்
அஞ்சான் !


மன்மதக் கலை
மட்டுந்தானா ?


பதநீர் இறக்கும்
கலையுந்தான்
எவரும் கைபிடித்து
கற்றுத் தரமுடியாதது !


கண்டுங் கேட்டும்
மாற்று வழிகள்
கண்டு தேறும்
சுயம்பான கலை !


கைத்திறனுக்கேற்ற
பலனுங் கூடும்
உடல் திறனுக்கேற்ற
பனை
எண்ணிக்கையுங் கூடும்


மக்களால் அறியப்படாத
பகட்டில்லாத
பழம் பெருங் கலை
பனம்பால் கறப்பு !








Tuesday, March 25, 2014

பதநீர் !

                 பதநீர்
              ---------
பதனிக்கு நிகராமோ ! சான்றோர் தந்த
பதனிக்கு நிகராமோ ! ஆ.....ஹா... (பதனிக்கு...)


பதனிக்கு நிகரெது ? துதிசெய்வோம் !--நாமிந்த
பாரில் பலவிதமாய்
கூறிச் சிலவிதமாய்                       (பதனிக்கு...)


ஓ....
மாவைக் கலத்திலிட்டு
மீளப்  பிசைந்து--பசும்
மாட்டின் பாலோடு--சேர்த்துக்
கூட்டி  ருசிகண்டாலும்       (பதனிக்கு....)


வாழைக் கனிபசி
வேழைக்  குதவும்படி
கனியைப்  பறித்து   --அதன்
தொலியை  உறித்தெறிந்து       (ஓ...மாவைப்..)


தேங்காய்தனை  எடுத்து
பாங்காய்  உடைத்துவைத்து
சிறுகத்  திருகி--அதை
பொரிய வறுத்தெடுத்து                (ஓ....மாவைப்...)   



(இது பதநீர் பற்றி எங்கள் கிராமத்தில் பாடி ஆடப்படும்
களியல் பாடல்.எழுதியவர் தெரியாது.முன்னோர் சொத்தாக
வழி வழியாய் பாடப்படுவது.

எனக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து,எங்கள் வீட்டுப் பக்கத்திலிருந்து விரிந்து கொண்டே போகும் மனங்காடு. இன்றோ மொட்டை காடு.
என் நினைவில் மட்டும் நிழலாடிக் கொண்டே இருக்கிறது பழைய நினைவு மட்டும்.
நான் கண்டு கலந்து உண்டு ருசித்து  அனுபவித்தவைகள் ஏராளம்.எதிர் பாருங்கள் பதநீர் தொடங்கி என் அனுபவங்களை.)