Thursday, April 10, 2014

பதநீர் 2-10/4/14

பதநீர்
பனையைப்
பக்குவப் படுத்துவதாலே

காலால் எடுத்து
தலையால் தருவது


மண்ணும் விண்ணும்
காற்றும் வெயிலும்
சூழ்ந்த
கூட்டுத் தயாரிப்பில்
வருவது பதநீர்


உணர்த்த முடியாத
குணத்தைக் கொண்ட
மரத்தின்
செயலை உணர்ந்து
கறப்பது
பனம்பால்


மடியில்லை காம்பில்லை
எனினும்
பாளை முகம் பாத்துக்
கறப்பது
பதநீர்


பருவ காலம் பாத்து
பக்குவப் படுத்தி
காலந் தவறா
கடமை வீரனின்
உழைப்பால் வருவது
பனம்பால்


காலை மாலை
பனை இடுக்கி
பாளை சீவி
பக்குவஞ் செய்து

தோப்புக் கரணத்தை
தொழிலாய் ஏற்று
பனை
உயரத்துக் கேற்ற
ஏற்ற இறக்க
எண்ணிக்கை
கூடி குறையலாம்


கரணந் தப்பின்
மரணமும் தழுவலாம்
அஞ்சான் !


மன்மதக் கலை
மட்டுந்தானா ?


பதநீர் இறக்கும்
கலையுந்தான்
எவரும் கைபிடித்து
கற்றுத் தரமுடியாதது !


கண்டுங் கேட்டும்
மாற்று வழிகள்
கண்டு தேறும்
சுயம்பான கலை !


கைத்திறனுக்கேற்ற
பலனுங் கூடும்
உடல் திறனுக்கேற்ற
பனை
எண்ணிக்கையுங் கூடும்


மக்களால் அறியப்படாத
பகட்டில்லாத
பழம் பெருங் கலை
பனம்பால் கறப்பு !








No comments: