Tuesday, April 15, 2014

பதநீர் 4 *

பதநீர்--4

மாதம் ஒரு ஓலை
மட்டைக்கு இடையில்
பாளை


ஓலையிலும் சிறிது
பாளை


ஓலையைத் தாங்கும்
கருக்குள்ள தண்டே
மட்டை


மட்டையைத் தாங்க
மட்டைக்கு ரெண்டு பத்தை

மட்டையைப் பனையோடு
இணைக்கும் கவட்டையாய்
இருக்கும் பத்தை


பத்தையைப் பனையோடு
பிடிக்க
சில்லாட்டை என்னும்
பன்னாடை இருக்கும்


தும்பு வலையாய்
பின்னப் பட்டிருக்கும்


காற்றுக்கு வழியும்
ஓலை பத்தை பனையுடன்
இறுக்கமாய் இருக்கச்
சுற்றி இருக்கும்


நீரோட்டத்  தும்பாய்
வளர்ந்து
அடுப்பெரியும்
விறகாக
முதிர்ந்து விடும்


பாளை இடுக்க
பத்தை சில்லாட்டையை
பனையிலிருந்து
அறுத்தெடுக்க வேண்டும்


மட்டைக்கு
இடையில் வளரும் பாளை
தனிமைப் படுத்தப்படும்


தனிப் பாளைக்குள்
கை விரல்கள் போல்
இளம்  அலவுகள் பொதிந்து
வைக்கப் பட்டிருக்கும்


பொதிந்த உறையை
நுட்பமாய் அகற்ற வேண்டும்


பொதி உறைகள்
அகற்றப் பட்டபின்
பாளை
வெண் தண்டாக
மேல் நோக்கி நிற்கும்

நுனி வெட்டப் பட்ட
வாழைத் தண்டாக
சீவப்பட்டிருக்கும்


பதநீர் சுரக்க
பாளையை
மேலும் தயார் படுத்த
வேண்டும்


கட்டுப் பாளை
கடிப்பைக் கொண்டு
இடுக்க வேண்டும்


பனை மட்டையில்
ஏறிய தொழிலாளி

வலப் பக்க மாகவே
மனையில் பனை
மண்டையில் சுற்றி வரவேண்டும்
இது எழுதாத சட்டம்

இதுவே  பாது காப்புக்கு வசதி
உத்தரவாதம்


வலக்காலை
பத்தை அறுத்த
இடத்தைப் படியாக்கி
ஊன்ற வேண்டும்


இடக்காலால்
குருத்து ஓலையோடு
மேல்நோக்கி நிற்கும்
மட்டைகளோடு
இடுக்கிப்  பிடித்துக்
கொள்ள வேண்டும்


பாளைக்கு நேர் மேல் உள்ள
மட்டையில்
நெஞ்சை வைத்து
தலை குப்புரப் படுத்து
தொழிலாளி

இரு கைகளாலும்
கடிப்பைப் பிடித்து
இடுக்குவார்


கடிப்பால் பாளை
அடியிலிருந்து
இரு கைகளாலும்
இறுகப் பிடித்து
பலங்கொண்ட மட்டும்
மேல் நோக்கி இழுப்பார்


கிர்  ரென்ற ஓசையோடு
நழுவுங் கடிப்புக்
கட்டைகள் மோதிப்
படீரென்ற ஓசை
எதிரொலிக்கும் !


இந்த இடுக்கோசை
பனங்காட்டில் நிறைந்
தொலிக்கும் !




 













































































 

No comments: