Monday, November 3, 2014

சிறப்புச் செய்தி 3/11/14.


தமிழ் அழிகிறதா ? – பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் கருத்து

 
 
 
 
 
 
i
 
Rate This


images
தமிழ் அழிகிறதா ? – பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் கருத்து
வாசிப்பு கிட்டத்தட்ட இல்லவே இல்லை என பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகிய தமிழின் மிக முக்கியமான சமகால எழுத்தாளர்கள் சமீபத்திய பதிவுகளில் கவலை வெளியிட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் கொச்சைத் தமிழாகவே தமிழ் இன்னும் சில பத்தாண்டுகளில் நிலை பெற்றுவிடும் என்னும் அச்சத்தையும் தெரிவித்திருக்கிறார். பாவண்ணன் நவம்பர் 2014 ‘தீராநதி’ இதழில் ” தமிழ் எழுதப் படிக்கத் தெரியாமலேயே மாணவர் பட்டப் படிப்பு வரை முடிக்க வழி இருக்கிறதே” என்று எழுதியிருக்கிறார். என் நினைவில் சிபிஎஸ்ஸி மாணவர்களும் தமிழ் நாட்டில் தமிழ் படித்தாக வேண்டும் என்று சமீபத்தில் அரசு உத்தரவிட்டது. மாநிலக் கல்வித் திட்டத்தில் எல்லா மாணவருக்கும் தமிழ் கட்டாயமே.
என் சமீபத்திய நேரடி கண்டுபிடிப்பு இது தான். தமிழில் வாசிப்பு அதிகரித்து இருக்கிறது. எப்படிச் சொல்கிறேன்? தமிழில் இந்து நாளிதழ் வெளிவரத்துவங்கி 15 16 மாதங்களே கடந்திருக்கும். 3 ரூபாய் என்று துவங்கியவர்கள் இன்று 5 ரூபாய்க்கு விலை ஏற்றி விட்டார்கள். விளம்பரங்களும் நிறைய. பலரும் அதை வாங்கி வாசிப்பதைக் காண்கிறேன். செறிவான பல கட்டுரைகள். நான் குறிப்பிட்ட மூன்று எழுத்தாளர் மற்றும் பல சமகால எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர்கள் கட்டுரை அதில் இடம் பெறுகிறது. தினமணி தினமலர் இரண்டுக்குமே சில விளிம்புகள் உண்டு. தமிழ் இந்து அவற்றைக் கடந்ததால் நல்ல ஊடகமாக உருவாகி இருக்கிறது. இந்துவின் வளர்ச்சி ஒரு மிகவும் நம்பிக்கை தரும் அறிகுறி.
வாசிப்பு குறைந்தது என்பது சற்றே மேலோட்டமான அங்கலாய்ப்பே. வாசிக்கும் விதம் மாறி இருக்கிறது. குடும்ப நண்பரான ஒரு மனநல மருத்துவர் என்னை விட வயதில் சற்றே இளையவர். இலக்கியத்தில் ஈடுபாடு உள்ளவர். சமீபத்தில் சந்தித்த போது “காலச்சுவடு எல்லாம் இப்போது வாசிக்கவில்லை. போயோனின் குறும்பதிவுகளை வாசிக்கிறேன்” என்றார்.
வலைப்பதிவுகள் மற்றும் மின் பதிவுகளை வாசிக்கும் பழக்கம் நிறையவே இருக்கிறது. Open Reading Room தளத்தில் பல அரிய படைப்புகளை நான் வாசிக்கிறேன்.
அச்சடித்த புத்தகத்தை சுமந்து எடுத்துப் பிரித்து வாசித்த காலம் முடிந்து விட்டது. இதை நாம் ஒப்புக்கொள்ளவில்லை. அவ்வளவே. மின்னணு வடிவில் பதிப்பும் வாசிப்பும் இனி செழுமை பெறும்.
தமிழ் அழந்து கொண்டிருக்கிறது என்னும் தொனியில் ஜெயமோகன் மற்றும் பல எழுத்தாளர்கள் நம்மை எச்சரிக்கவே குறிப்பிடுகிறார்கள் எனக் கொள்வோம். ஊடகங்களில் இன்னும் செய்தி தூயதமிழில் தான் வாசிக்கப் படுகிறது. எழுதப் படிக்க மட்டுமே தெரிந்த லட்சக்கணக்கானோர் இன்னும் தினத்தந்தியை உரக்க வாசித்து நாலு பேருடன் அலசுகிறார்கள்.
எழுத்தாளர்களுள் கோட்பாடு அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும் பெரிய இடைவெளியும் அணிகளும் இருக்கின்றன. அவை என்றும் இருக்கும். ஆனால் ஏன் அமர்வுகள், விமர்சனங்கள் எழுத்தாளரைச் சுற்றி அவரது வாசகர் வட்டம் என்னும் அடிப்படையில் நடக்கின்றன? இது ஒரு சுய பரிசீலனைக்கான விஷயம்.
மாணவருக்கு மற்றும் எல்லா வயதினருக்கு எனத் தனித்தனியாக நல்ல தமிழில் எழுதும் போட்டி, நூல் விமர்சனத்துக்குப் பரிசு என்னும் போட்டிகளை எழுத்தாளர்கள் துவங்கக் கூடாது? (முதலில் நீ செய் என்று ஒரே போடு போடாதீர்கள். நான் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவன் என்று நான் மட்டுமே சொல்லிக் கொள்கிறேன்.)
சமீபத்தில் ப.சிதம்பரம் என்னும் அரசியல்வாதி ஒரு இலக்கிய அமைப்பைத் துவங்கி இருக்கிறார். பல அரசியல்வாதிகள், பத்திரிக்கை நிறுவனங்கள், நல்லி குப்புசாமி போன்ற பெரும்பணக்காரர்கள் (இப்படி ஒரு முயற்சி எடுத்து நல்ல தமிழ் எழுதும் வாசிக்கும் ஒரு இயக்கத்தை முன்னெடுத்தோமென்றால்) ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள். சினிமாவில் மோகம் கொண்ட ஆயிரக்கணக்கான சினிமாத் தொழிலாளர் கூட்டம் இதில் இணையத் தயாராகவே இருப்பார்கள்.
நாம் கவலைப் படுமளவோ அல்லது நம்மால் காப்பாற்றப் படுமளவோ தமிழ் என்றுமே நசிந்து விடாது என்பது என் துணிபு. அதே சமயம் ஒரு சமூகத்தின் மிகப் பண்பாடான, மேலானதான ஒரு கூடுதல் இலக்கியத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்க முடியும் என்னும் காரணத்துக்காக நாம் இதை முயலலாம்.
எதிர்மறையும் தாழ்வுணர்ச்சியுமான சிந்தனை இந்த அரிய எழுத்தாளர்களை எப்படித் தொற்றியது என்பது தான் வருத்தமான விஷயம்.

No comments: