‘எது கவிதை?’
என்னும் கட்டுரையில் கவிதையைக் குறித்ததான அவர் பார்வையை விளக்கமாக முன்வைத்துள்ளார். “பிரகிருதியின் தோற்றங்களோடு மனித உணர்ச்சிகளைச் சம்மேளனப்படுத்திக் கவிதை இயற்றுவதைச் சுவையுடன் செய்ய வேண்டும்.” உணர்ச்சிகளின் சமநிலை அவருக்கு முக்கியமானது. நல்ல கவிதையின் முதன்மையான பண்பு இது. “நல்ல கவிதையின் அடிநாதம் அறமாக இருத்தல் வேண்டும். ஆனால் இந்த அறமார்க்கத்தைச் சாதாரணமாக வெள்ளையாகச் சொல்லிவிட்டால் அது கவிதையாகாது. கேவலம் போதனை நூலாகத்தான் ஆகும்.” கவிதையின் குறிப்புணர்த்தும் போக்கு அவருக்கு முக்கியமானது. சமகால ஐரோப்பிய கவிதைகளிலிருந்து இம்மதிப்பீட்டை அவர் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் முன்வைத்தது கவிதையின் செவ்வியல் வடிவமே. “கவிதையானது தர்மத்தை அடிநாதமாகக் கொண்டு அறிவின் பகுதியாகிற கற்பனாசக்திக்கு நல்லுணர்வைத் தந்து, இயற்கையின் அழகுகளையும், மனித வாழ்க்கையின் சுகதுக்கங்களையும் உன்னதமான பாவங்களையும் சுவையோடு கோத்து, மனிதனுடைய இதயத்தில் பேருணர்ச்சிகளை எழுப்ப வேண்டும்.” வ.வே.சு. ஐயர் முன்வைத்துள்ள இப்பண்பு செவ்வியல் கவிதைக்கே உரியது. இதன் அடிப்படையில் தமிழ்க் கவிதை மரபின் மறுமலர்ச்சிக்கு முன்னதான நிலையை மதிப்பிட்டுள்ளார். “சென்ற முந்நூறு வருஷங்களில் நமதுநாட்டில் முதல்தரமானக் கவிதை என்று சொல்லத் தகுந்ததாக ஓர் அடிகூட எழுதப்படவில்லை.” முந்நூறு வருடங்களில் முதல்தரமானக் கவிதை ஓர் அடிகூட எழுதப்படவில்லை என்பது மிகையானத் தோற்றத்தைத் தரலாம். ஆனால் இதற்கிணையானக் கருத்தை, வ.வே.சு. ஐயரின் சமகாலத்தவரான மாதவைய்யரும் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வ.வே.சு. ஐயரின் கவிதை குறித்த நிலைபாடு இத்தகைய நிலைபாட்டிற்கே கொண்டு செல்லும். சமகாலத்து பண்டிதர்களைக் கவிஞனாக ஏற்க மறுக்கிறார். “கவிதை ஒன்றுதான் உலகத்தில் பண்டிதனால் எழுதத்தக்கது என்பது இல்லை. கடைத்தரமான கவியாக இருப்பதைவிட நல்ல உரையாசிரியனாக இருத்தல் எவ்வளவோ மேல்.” தமிழ்க் கவிதை மரபின் மீதான வ.வே.சு. ஐயர் அறிவும் குறிப்பிடத்தக்கது. ‘நம் பெண்கள்’ கட்டுரையில் சங்க இலக்கியம் மீதுள்ள தன் ஈடுபாட்டைப் பதிவு செய்துள்ளார். “கலித்தொகை குறுந்தொகை களையும் மற்றுமுள்ள அகப்பாட்டுக்களையும் படிக்கையில் பண்டைய நாள்களில் தமிழ்ப் பெண்கள் விவாக விஷயத்திலும் மற்ற விஷயங்களிலும் எத்தனை சுதந்திரம் அனுபவித்தார்கள் என்பது நன்கு புலனாகும். மற்றெந்தப் பாஷையிலும் எழுதியுள்ள பெண் கவிகளை விடத் தமிழ்ப் பாஷையில் பாடிய பெண் கவிகளின் தொகை மிகவும் அதிகம்.” சங்க இலக்கியத்தை அவர் அறிந்திருந்தார் என்பதல்ல, அவருடையதான புரிதலும் இருந்துள்ளது. தமிழ் இலக்கிய மரபுபினைக் குறித்ததான இப்புரிதல், ஐரோப்பிய இலக்கியச் சிந்தனைக் குறித்த அறிவு, இவை இரண்டும் வ.வே.சு. ஐயரிடம் இணைந்து செயல்பட்டுள்ளன.
No comments:
Post a Comment