Saturday, July 18, 2015

சிறப்புச் செய்தி (18/7/15)

பா.சரவணன்: நல்ல கவிதையை எப்படி வரையறுக்கிறீர்கள்?



தி.பரமேஸ்வரி: கவிதை என்றால் என்ன என்று மிகச் சரியாக என்னால் வரையறுக்க இயலாது. கவிதையைப் படிக்கும்போது அது என்னை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்க வேண்டும். ஒரே ஒரு வரியோ அல்லது வார்த்தையோ, கவிதைக்குள் என்னை ஈர்க்கிறது என்றால் அந்தக் கவிதையைத் திரும்பத் திரும்பப் படிக்கிறேன். கவிதையில் பயன்படுத்தப்படும் சொற்கள், அதன் வலிமை, சொல்லப்பட்ட முறை, வாசகனுக்கு உணர்வை கடத்தும் தன்மை ஆகியவற்றையே கவிதைக்கான இலக்கணமாகப் பார்க்கிறேன். காலம்கடந்தும் வெவ்வேறு சூழல்களில் ஒரு கவிதை நம் நினைவுக்கு வருகின்றதென்றால் , அதுவே அந்தக் கவிதையின் வெற்றி என்று  நினைக்கிறேன். தேவதேவன், நகுலன், ஆத்மாநாம் கவிதைகள் நான் திரும்பத் திரும்ப வாசிப்பவை. கவிதையின் பாடுபொருள் சார்ந்து ஒரே கவிதையில் காலத்தைத் தாண்டுபவர்களும் உண்டு. ”ஆவீன மழை பொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய் நோக அடிமை சாக’ என்று தொடங்கும் இந்த ஒரு கவிதை மூலம் கவிராயர் காலங்கள் கடந்து வாழ்கிறார்.


பா.சரவணன்: கவிதைகள் எதிர்கொள்ளும் புதிய சவால்கள்?

தி.பரமேஸ்வரி: பிற மொழிக் கவிதைகளை வாசிக்கும்போது, அவர்களின் பாடுபொருள் மலைப்பைத் தருவதாக இருக்கிறது. அண்மையில் வெளியாகும் தமிழ்க்கவிதைகளில் ஒரு தத்துவ வறட்சியையும் பெரும்பான்மையும் தன்-மையக் கவிதைகளாக மட்டுமே இருப்பதும் சற்றே சிந்திக்க வேண்டியவை. பேசப்பட வேண்டிய பல விஷயங்கள் இன்னும் பேசாமலே இருப்பதும் அதில் நாம் கையாள வேண்டிய புதிய உத்திகளையும் நவீன கவிதைகள் மக்களை விட்டு ஒதுங்கியிருப்பதை மாற்றிக் கொண்டு போவதையும் நம்முன் இருக்கும் சவால்களாகக் கருதுகிறேன். சங்க இலக்கியப் பாடல்களில் இயற்கை நம்முடனே பயணித்து இருக்கும். ஆனால் இன்று எழுதப்படும் கவிதைகளில் இயற்கையுமில்லை. சமூகச் சிக்கல்களுமில்லை.

No comments: